கூடுதல் விலைக்கு மது விற்றதாக மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேருக்கு பணியிட மாற்றம்

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகளில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் குன்னூர், கூடலூர் உள்பட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குன்னூரில் உள்ள டாஸ்மாக்கடை ஒன்றில் ஒரே வாடிக்கையாளரிடம் பலமுறை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், காந்தி, விற்பனையாளர் ஆறுமுகம் ஆகிய 3 பேர் அப்பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்த பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு மதுபானக் கழகத்துக்கு சொந்தமான குடோனில் பணி அமர்த்தப்பட்டனர்.