அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி: தந்தை ஸ்டான் லூர்துசாமிக்கு தாழ்மையான அஞ்சலி

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கும் பழங்குடியினருக்கும் சேவை செய்து மனித உரிமைகளின் குரலாக மாறிய ஒருவர், இறந்த நேரத்தில் கூட அவருக்கு நீதி மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது

உத்தர பிரதேசத்தின் மதுராவில் ரவுடிகள் சிலர் 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததோடு அவளை 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ‘மக்கள் உயிர் பயத்தில் நடுங்குகிறார்கள், ஆனால் அரசாங்கம் உறங்குகிறது’. மதுராவில் ரவுடிகளின் அட்டகாசத்தால் சிறுமி உயிருக்கு போராடுகிறாள். காட்டாட்சியில், பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.