R.N. ரவி குற்றச்சாட்டு: காவல்துறையினர் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை..!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை காவல்துறையினர் மிரட்டியதால் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என ஆளுநர் R.N. ரவி குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்க, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டில் ஆளுநர் R.N. ரவி பேசுகையில், “இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. சிலர் ஊட்டி வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் மிரட்டப்பட்டனர். மாநில அரசின் காவல்துறையினர் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று கதவை தட்டி, நீங்கள் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர். மேலும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எதுவும் தெரிவதில்லை. ஆண்டுக்கு 6,500 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர்.

இவர்கள் ரூ.15,000 சம்பளத்துக்கு தினக் கூலிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் அரசு துறைகளில் ஏதாவது பணியில் சேருவதே இலக்காக இருக்கிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளது” என காட்டமாக R.N. ரவி தெரிவித்தார்.

SFI மாணவர்கள் – காவல்துறையினர் இடையே கைகலப்பு..!

சென்னை தரமணியிலுள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறி SFI மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறியது.

சென்னை தரமணியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், முதலாமாண்டு படித்துவந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் தனது ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரத்துக்கு பிறகு சக மாணவி மட்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பி உள்ளார்.

விடுதிக்கு திரும்பிய மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாணவி அவரது ஆண் நண்பரை சந்திக்க சென்றதாகவும், ஆனால் எங்கு சென்றார் என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காணாமல் போன மாணவி, மறுநாள் சனிக்கிழமை காலை விடுதிக்கு திரும்பியுள்ளார். ரத்த காயங்களுடன் வந்த மாணவியிடம் விடுதி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பரைச் சந்திக்க சென்றதாகவும், அவர் போதை பொருளை தனக்குக் கொடுத்து, ஆண் நண்பருடன் சேர்ந்து சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததோடு, அந்த மாணவிக்கு ‘டீசி’ கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர், கல்லூரி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரிக்குள் போராட்ட மாணவர்கள் திடீரென நுழைந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அண்ணாமலை: தமிழகத்தில் காவல்துறையை பாதுகாப்பதற்காக ஒரு துறையை உருவாக்கும் நிலை..!

தமிழகத்தில் காவல் துறைக்கு பாதுகாப்புக்கு கொடுக்க வேண்டியுள்ளது, காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. எனவே திமுக ஆட்சியில் காவல் துறையை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார், தற்போது செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பாஜக யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை.

பாஜக கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழர்களின் அடையாளம் பெருமை. அதில் துணை முதல்வரும், அவரது மகனும் பங்கேற்பது தவறல்ல. ஆட்சியரை எழுப்பிவிட்டு அவரது இருக்கையில் மகனின் நண்பர்களை அமரவைத்தது தவறு. அமைச்சர் மூர்த்தி நடந்துகொண்ட விதம் அநாகரிகம். அதிலும் ஆட்சியர் யாரும் என்னை வற்புறுத்தவில்லை என பதிலளித்தது முட்டாள் தனமானது. அரசியல் லாபம் கருதிக்கூட இருக்கையை விட்டுக் கொடுத்து இருக்கலாம். அமைச்சர் மூர்த்தி பவர் இருக்கும் வரை ஆடுவார். அதிகாரிகள் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.

திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளை திணித்துள்ளார் என பெரியார் கடுமையாக சாடினார். அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.

ஈரோடு இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த தேர்தலில் ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து திமுகவினர் சித்திரவதை செய்து துன்புறுத்தினர். மீண்டும் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாககக்கடாது என்பதற்காக பாஜக போட்டியிடவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சினைக்கு திமுக அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்கிறது. அதற்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதியில் ஜெயிப்போம் என யாரும் சொல்ல முடியாது.

இரவில் நன்றாக தூங்கச் செல்பவர்கள் காலையில் எழுந்திருப்பதில்லை. எனவே 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும். தமிழகத்தில் காவல் துறைக்கு பாதுகாப்புக்கு கொடுக்க வேண்டியுள்ளது. காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. எனவே திமுக ஆட்சியில் காவல் துறையை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

மூட்டை, மூட்டையாக ரூ 5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் கூட்டுரோடு திருக்கோவிலூர் தெற்கு தெரு, பகுதியில் உள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் காவல்துறைக்கு கிடைக்க அரகண்டநல்லூர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அட்டை பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை காவல்துறை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவல்துறை அத்துமீறல்களை மு.க.ஸ்டாலின் தடுக்க வேண்டும்

பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதை பார்க்கும்போது, முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள்தான் பொதுமக்களின் நினைவுக்கு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் மலையடிப்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகனை காவல்துறை தாக்கிய வீடியோ சமூகவலைத் தளங்களில் பரவியதன் காரணமாக தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இதேபோன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை தாட்கோ நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணியை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, காவல்துறை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே இடையப்பட்டி வில்வனூர் மேற்கு காட்டை சேர்ந்த முருகேசன் என்பவர் காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்துள்ள நிலையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. எனவே தவறு செய்திருந்தால், தொடர்புடைய நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டும். அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறை தாக்குதல் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.

இது மனித உரிமையை மீறும் செயல். எனவே முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, இதுபோன்ற போலீஸ் அத்துமீறல்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்துக்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.