குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்

குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனிடையே துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் குணால் கம்ராவின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த சிவசேனா கட்சியினருக்கு நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன். முடிந்து வாருங்கள் என்று சவால் விடுத்து இருந்தார்.

மேலும் மும்பை கர் காவல்நிலையம் குணால் கம்ராவை விசாரணைக்கு அழைத்தது. ஆனால், தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டு இருந்தார். ஒருவேளை தான் கைது செய்யப்படலாம் என அஞ்சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால், மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மும்பையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், குணால் கம்ரா மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் வானூரிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடந்தது..!

நூற்றாண்டு கண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் பழமையான வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு இந்த சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த தேர்தல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தேர்தல் நடந்தபோது பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த சங்கத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான 4,752 வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு தேர்தல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.

உயர் நீதிமன்றத்தி்ல் உள்ள எம்எச்ஏஏ சங்க கட்டிடத்தில் சிஐஎஸ்எப் மற்றும் தமிழக காவல்துறையினரின் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் காலை 10 மணி்க்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் கட்டிடத்துக்கு வெளியே 2 பெரிய திரைகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.