எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் எடப்பாடி பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்ததாலேயே பள்ளியில் பேச அனுமதித்திருக்கிறார்கள்” எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சராக இருந்த நீங்கள் ஒரு விஐபிதானே? ஒரு விஐபி-யைத் தேடி நிறையப் பேர் பார்க்க வருவார்கள் என்பது அடிப்படை தியரி. அப்படிப் பார்க்க வருகிறவர்கள் ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்துவிட்டா அனுமதி அளிப்பார்கள்? இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதுதான் கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் அவருடைய கோஷ்டியினர் கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு 2018-இல் கைதானார்கள்.

கள்ளநோட்டு கும்பலுடன் பழனிசாமி இருக்கும் புகைப்படம் வெளியாகி அன்றைக்குச் சந்தி சிரித்தபோது அவர் எங்கே போனார்? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு சீட் கொடுத்தது பொதுச் செயலாளர் பழனிசாமிதானே? “சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் பேச்சுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்” எனச் சொல்லும் பழனிசாமி, ஆனந்த், ஹரிதரன் ஆகியோரது செயல்களுக்கும் பொறுப்பு ஏற்றாரா?

“அதிகாரத்துக்கு என்றுமே நாங்கள் அடிமை இல்லை. எங்களுக்கு மரியாதை, தனித்துவம் உள்ளது” எனப் பெருமை பேசியிருக்கிறார். “அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை” என்றால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் டெல்லிக்கு ஏன் காவடி தூக்கினீர்கள்? கட்சிக்காரர்கள் தவறு செய்திருந்தால் அம்மையார் ஜெயலலிதா பொறுப்பில் இருந்து நீக்குவார்; கட்சியை விட்டு கட்டம் கட்டுவார்; எம்.எல்.ஏ பதவியை எல்லாம் பறித்ததில்லை.

ஆனால், ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அதிமுக எம்.எல்.ஏ-கள் 18 பேரை நீக்கிய நீங்கள் அதிகாரத்துக்கு என்றுமே அடிமை இல்லை என்று சொல்ல நா கூசவில்லையா? தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டு, அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றவில்லையா? உங்களின் தனித்துவ அடையாளமே பாதம்தாங்கிதானே?

“அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீதான தாக்குதல் காவல்த்துறைக்கே பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறது” என பழனிசாமி புலம்பியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க முயன்றபோது திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.

ஆனால், ‘சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையை தாக்கினார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது’ என்று அன்றைக்கு வியாக்கியானம் பேசியவர்தான் பழனிசாமி. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவுக்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தள்ளியது யார்? உங்கள் ஆட்சியில் காவல்துறையினரால் பெண்களுக்கு மட்டுமல்ல, காவல்துறையினரால் காவல்த்துறைக்கே பாதுகாப்பில்லாமல் போனது எல்லாம் ‘செலக்டிவ் அம்னீஷியா’ போல் மறந்துவிட்டதா? “உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்கவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள்” என உளறிக் கொட்டியிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்போலோவில் இருந்த போது ஆரம்பித்த உளறல்களை இன்னுமா நீங்கள் நிறுத்தவில்லை? கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. புகைப்படங்களும் வெளியிட்டோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதை இன்றும் இணையத்தில் தேடிப் படிக்கலாம்.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதலமைச்சரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. 75 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? ‘கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்’ என எம்.ஜி.ஆர் பாடிவிட்டு போனது பழனிசாமிக்குத்தான்!

“இட்லி சாப்பிட்டார்கள்… வார்டுக்கு மாறிவிட்டார்கள்… விரைவில் வீடு திரும்புவார்கள்” என அ.தி.மு.க நிர்வாகிகளும் அமைச்சர்களும் பொய் பூக்களைக் கோத்து, கதை மாலையைக் கட்டியதை போல எங்களுக்குக் கட்ட தெரியாது. திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை.

ஜெயலலிதா மயக்கமான பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக்கப்பட்டன. ஆஞ்சியோ பரிந்துரைக்கப்பட்டும், அதனை அப்பல்லோ வழங்காத வகையில் சசிகலா உள்ளிட்ட 5 பேர் திட்டமிட்டுச் செயல்பட்டனர். முதல்வர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். அவர் இறந்த தேதியே தவறு. ஜெயலலிதா இறப்பை மறைத்து, அறிவிப்பைத் தாமதப்படுத்தத் தந்திர நடவடிக்கை’ என்றெல்லாம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அக்கு வேறாகப் பிரித்தார்கள். காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என்ற திருவள்ளுவரின் குரலை மேற்கோள் காட்டி, வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்” என நீதிபதி ஆறுமுகசாமி குறிப்பிட்டார்.

அந்த நரிகள் கூட்டம் எங்கள் தலைவரின் உடல்நிலையைப் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறதா? தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் எடப்பாடி பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது. தானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டில் 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தம்..!

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிகும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28-ஆம் தேதி சென்றடைந்தார்.

மேலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதாவது, அங்கு கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் நம்பர் 1 குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ். உலகளவில் 24 நாடுகளில் 150 நகரங்களில் செயல்பட்டு வரும் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது. இந்நிலையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நோக்கியா நிறுவனமானது பின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனமாகும். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

அதன்படி முதலமைச்சரின் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு உதவுகிறது. காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது. அதேபோல், இந்த நிறுவனம் சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். மேம்பட்ட பேக்கேஜிங், ஐஓடி, லைஃப் சயின்ஸ், ஏஆர்.விஆர், எம்இஎம்எஸ், பவர் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தைகளில் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு புதுமைகளை வழங்கும் மேற்பரப்பு மற்றும் பொருட்களை மேம்படுத்தும் அமைப்புகள் அதாவது வெப்ப செயலாக்கம், ஈரச் செயலாக்கம், பிளாஸ்மா சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு போன்றவற்றை வழங்குகின்றன. இந்நிறுவனம் கோயம்புத்தூரில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம். ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையரான மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனம். இது பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு 5G, EV, IOT, தரவு மையங்கள் போன்ற ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டான தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர்.

இந்த நிறுவனம் கடந்த 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் ஐ.சி வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு, பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனம்.தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்க கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.50 கோடி முதலீட்டில் 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிக குழு தலைவர் சாண்டி மோட்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் உரை: இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வரும் உலக மூதலிட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். அதில், “வளர்ச்சி மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20% தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்.

மனித வளங்கள் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நவீன உள்கட்டமைப்பு திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும். சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தொழிலதிபர்களை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், சென்னையடுத்த சிறுச்சேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ரூ.450 கோடி நோக்கிய நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Donald Trump: கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் நாட்டின் மோசமான அதிபராக இருப்பார்..!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-அம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நிலையில், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் குறித்து குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நியூஜெர்சியில் கூறுகையில், ‘அவர் மீது எனக்கு மரியாதை இல்லை. அவரது திறமையின் மீதும் எனக்கும் திருப்தியில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நாட்டின் மோசமான அதிபராக இருப்பார் என்று நினைக்கிறேன். கமலா ஹாரிஸ் குறித்து தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது தவறில்லை என்று நினைக்கிறேன். அவர் மீது எனக்கு மிகவும் கோபம் உள்ளது. நாட்டுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? ஒட்டுமொத்த நீதித்துறையும் எனக்கு எதிரான ஆயுதமாக தவறாக பயன்படுத்தினர். எனவே தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவதில் தவறில்லை. அதற்கு அவர் தகுதியானவர் தான். கமலா ஹாரிஸின் கொள்கை மிகவும் விசித்திரமானது’ என டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.