ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் வேல்முருகனுக்கு அறிவு வரும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அப்போது, “எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்.
இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார். நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பாஜகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.” என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் வேல்முருகன் ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்தில் அவரை கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில், “வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு, மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதமாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், பிரதமரை ஒருமையில் பேசி, கீழ்த்தரமாக விமர்சித்து, இந்தியாவின் நிதி அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வன்கொடுமை சட்டத்திலும், ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்திலும் கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.
மேலும், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் செயல்படும் இந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது என்ஐஏ வழக்கு பதிந்து, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் இந்த நபருக்கு அறிவு வரும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவியேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தன் பொறுப்பிலிருந்து கடமை தவறி விட்டதாகவே கருதப்படுவார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கச்சேரி வைத்துக் கொள்வதாக சபதமிட்டுள்ளார். முடிந்தால் கை வைத்துப்பார் வேல்முருகா! சிறையில் களி தின்ன ஆசையா வேல்முருகா?” என நாராயணன் திருப்பதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.