அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட்ட பெண் கைது..!

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரை தெரியும், அந்த அதிகாரியை தெரியும்.. அவர் என் மச்சான்.. அவர் என் மாமா.. என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று பலர் லட்சக்கணக்கில் ஏமாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மீஞ்சூர், புங்கம்பேடு, பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு தனது உறவினர் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாக கூறி ஜோதி என்ற பெண் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்கள் என சுமார் 25 நபர்களிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் வரை திரட்டி ஜோதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ஜோதி யாருக்கும் வேலை வாங்கி தராமல் சதீஷ்குமாரை பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட மீஞ்சூர் வ.உ.சி தெருவை சேர்ந்த ஜோதி என்ற மாதுரி என்பவரை காவல்துறை கைது செய்தது.

திருமாவளவன் கேள்வி: ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா..?

ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது.

நாகரீக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு, யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்று நிலைப்பாட்டை எடுத்து அரசியல் செய்கிறார். அவரது அணுகுமுறை வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் அனுமதி கேட்டுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்கான அனுமதி பெறவில்லை, வகுப்புகள் தொடங்கப்படவில்லை, இன்னும் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தந்திருக்கலாம். அதற்காக குரல் கொடுக்கவில்லை. அதேபோல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனம், விளிம்பு நிலை மக்களுக்கான கல்வி நிறுவனமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு முறையாக நிதி வருவதில்லை. மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித் தொகை தரப்படுவதை நிறுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது.

ஏழை மாணவர்களின் கல்வி முக்கியம் என்று அண்ணாமலை கருதினால், அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்கார்லர்ஷிப் வாங்கி கொடுப்பதை பற்றி பேசி இருக்க வேண்டும். அதனை ஏன் அண்ணாமலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து குரல் கொடுத்திருக்கிறாரா? அந்த ஸ்காலர்ஷிப்பிற்கு கூட வருமான வரி விதிக்கிறார்கள். முன்னேறிய சமூக மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு. ரூ.8 லட்சத்திற்கு மேல் பெற்றோரின் வருமானம் இருந்தால் மட்டுமே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் இல்லை. ஆனால் ஓபிசி மாணவர்களின் பெற்றோருக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சம்தான். ரூ.2 லட்சத்திற்கு மேல் பெற்றோர் சம்பளம் பெற்றால், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பெற்றோர் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெற்றால், அவர்களுக்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடையாது. இவ்வளவு மோசமான வருமான வரம்பை வைத்துள்ள மத்திய அரசிடம் சென்று அண்ணாமலை கேட்டிருக்காலாமே? அண்ணாமலை ” போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கொடுக்க கூடாது என்பதற்காக சூது, சூழ்ச்சி செய்யும் பாஜக இவ்வளவு பெரிய பாடுபாடு வைத்துள்ளது. இந்த பாகுபாட்டை களைவதற்கு பாஜகவும், அண்ணாமலையும் என்ன குரல் கொடுத்துள்ளார்கள்? இந்தி மீது வெறுப்பு கிடையாது.

ஆனால் இந்தியை இந்தியாவின் மூலைகளிலும் கற்றாக வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது. ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? அரசுப் பள்ளியில்தான் மாணவர்கள் அதிகமாக படிக்கிறார்கள். இந்தியா முழுக்க ஒரே கொள்கையை திணிப்பது ஏன்? எல்லோரும் இந்தியை பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? என்னை ஏன் இந்தி மாணவனாக மாற்ற முயற்சிக்கிறாய்? இதற்கு பின் ஒரு மறைமுக நோக்கம் இருக்கிறது. தேசத்தில் ஒரே மொழிக் கொள்கை என்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த ஆயுதப்படை காவலர் கைது..!

வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆயுதப்படை காவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சம்பத் வழுதரெட்டியைச் சேர்ந்த கடலூர் ஆயுதப்படை முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியன் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதால் யாருக்காவது அரசு வேலை கேட்டால் சொல்லுமாறு சம்பதிடம் தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து சம்பத் தனது மகன் ஞானவேல் BE முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை கேட்டு பாண்டியனிடம் அணுகியுள்ளார்.

அப்போது, பாண்டியன் உங்கள் மகனுக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி மேலும் சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்தும், ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பிய சம்பத் தெரிந்தவர், தெரியாதவர் என அங்கும் இங்கும் கடனை வாங்கி பாண்டியன் வங்கி கணக்கில் ரூ.4.50 லட்சம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டியன் வேலை வாங்கித் தராமல் இன்று, நாளை என இழுக்கடித்து உள்ளார்.

இதனால் மனம் நொந்துபோன சம்பத் வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் பணம் வரவில்லை ஆகையால் விழுப்புரம் குற்றப்பிரிவில் புகார் சம்பத் கொண்டார். இது குறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.