கமல்ஹாசன் சூளுரை: நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்கும்..!

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவில் கமல்ஹாசன் சூளுரைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கொடியேற்றினார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது, உறவு என்பது நீடிக்கலாம், நீடிக்காமல் போகலாம்.

ஆனால், தமிழக மக்கள் என் மீது கொண்ட உறவு உணர்வாக, அன்பாக மாறி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. நம் அனைவரையும் இணைப்பது தமிழ்மொழிதான். தமிழை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. சிலர் என்னை தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சனம் செய்கிறார்கள். தோல்வியில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நான் 20 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான். அவ்வாறு முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருந்தால் நான் நிற்கும் இடமும், நான் பேசும் வார்த்தையும் வேறாக இருந்திருக்கும். ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என்பதை எனது அரசியல் அனுபவத்தில் புரிந்துகொண்டேன்.

தமிழக மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகூட அறியும். விருப்பமான மொழியை கற்பார்கள். ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள். மொழியைக் காரணம் காட்டி கல்விக்கான நிதியைத் தர மறுப்பது, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க கைச்செலவுக்கு பணம் தரமாட்டோம் என்று சொல்வதற்கு சமம். மொழியும், கல்வியும் அனைவருக்கும் பொதுவானது.

இந்த ஆண்டு நாடாளுமனறத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் மநீமவின் குரல்கள் ஒலிக்கும். எனவே, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான உழைப்பை இப்போதே தொடங்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

முரளி அப்பாஸ் சரவெடி: தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனம்..! தன் வாழ்க்கை கணிக்க முடியாதவர்..!

தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சனம் நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர் தமிழிசை சவுந்தராஜன் என முரளி அப்பாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்து இருந்தார். இதற்கு, சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சவுந்தராஜன், இன்று கமல்ஹாசன் தனக்களிக்கப்பட்ட ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சவுந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘உலகநாயகன்’ பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.