தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள சின்னப்பாளையம் அருகில் பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு மாணவிகள், இளம் பெண்களை என பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட சம்பவம் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை CBI விசாரித்த நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணன் ஆகியோரின் ஐபோன் மற்றும் லேப்டாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த மாதம் விசாரணை முடிவடைந்த நிலையில், கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மூன்றாம் குற்றவாளியான சதீஷ் மற்றும் ஏழாவது குற்றவாளியான ஹேரன் பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நான்காவது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஆறாம் குற்றவாளியான பைக் பாபு, எட்டாம் குற்றவாளியான அருளானந்தம் மற்றும் ஒன்பதாம் குற்றவாளியான அருண் குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்பதால், ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.