தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று புதன்கிழமை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவை ஆற்றும் செவிலியர்களை போற்றும் விதமாக உலக செவிலியர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
செவிலியர் பணியில் தம்மை அர்ப்பணித்து பெரும் போற்றுதலுக்குரியவராக திகழ்ந்தவர் நைட்டிங்கேல் அம்மையார். நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1974-ம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில், தலைமை மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலையில் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துவிழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியினை செவிலியர் உமா மஹேஸ்வரி மற்றும் செவிலியர் மல்லிகா தொகுத்து வழங்கினார்கள்,செவிலியர் உமா மஹேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி. ஜெகதா அவர்கள் வாழ்த்து மடல் வாசித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி. பத்மாவதி, ராசாத்தி , ஜெகதா, வசந்தி மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
தலைமை மருத்துவர் ஜெஸ்லின் , மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியர்கள் என பாராட்டி, தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைத்து செவிலிய சகோதர, சகோதரிகளுக்கும், செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி அனைவருக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார். தலைமை மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து செவிலியர்களின் சார்பாக தலைமைச் செவிலியர் பத்மாவதி அவர்களையும், தென்காசி மருத்துவமனையோடு இணைந்து செயலாற்றும் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செவிலிய சகோதர சகோதரிகளின் ஆட்டம் பாட்டம் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் மருத்துவர் ஜெஸ்லின் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி.ஜெகதா நன்றி தெரிவித்தார்.