ATM -மில் ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது…! போட்டிபோட்டு எடுத்த பொதுமக்கள்..!

ATM-மில் பணம் எடுக்க ATM கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தால் ATM-மில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வந்ததால் ATM-மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், யாகுத் புரா பகுதியில் ATM மையம் ஒன்று அமைத்துள்ளது. நேற்று ATM-மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ATM-மில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வந்தது.

அதேபோல் மற்றொரு நபருக்கும் ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரம் வந்தது. ஆனால் அவர்களின் கணக்கில் ரூ.3000 மட்டும் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் அப்பகுதியில் பரவியது. இதனால் ATM-மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

ஒவ்வொருவரும் போட்டி போட்டு கார்டை போட்டு பணத்தை எடுத்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவு கூட்டம் கூடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தகவல் தெரிவித்தார். காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். மேலும் காவல்துறை வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Revanth Reddy: பாஜக 400 இடங்களில் வென்றிருந்தால் இந்திய அரசியல் சாசனத்தையே அழித்து இருப்பார்கள்..!

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 400 இடங்களில் வென்றிருந்தால் இந்திய அரசியல் சாசனத்தையே அழித்து இருப்பார்கள் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி பேசுகையில், 400 இடங்களில் வெல்வோம் என பாஜக தொடர்ந்து பிரசாரம் செய்தது. ஆனால் பாஜகவின் முயற்சியை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடித்தன. பாஜக மட்டும் தனித்தே 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இடஒதுக்கீட்டையே அழித்திருப்பார்கள்; அரசியல் சாசனத்தையே மாற்றி இருப்பார்கள்.

இப்போது அறிவித்ததைப் போல ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எனும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கமாட்டார்கள். தற்போதும் கூட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தியதால்தான் பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இல்லை எனில் இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்காது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை கடுமையாக எதிர்த்தவர் பிரதமர் மோடியும் பாஜகவும்தான். உச்ச நீதிமன்றத்திலேயே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே முடியாது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததும் மத்திய அரசுதான். தற்போது நிலையை மாற்றிக் கொண்டது பாஜக. காரணம், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால்தான்.

தற்போதைய அறிவிப்பின் மூலம், ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா முன்னோடி மாநிலம் என மோடியே ஒப்புக் கொண்டுவிட்டார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனையை மோடி ஏற்றுக் கொண்டுவிட்டார். இடஒதுக்கீட்டை அதிகரிக்க போதுமான தரவுகள் தேவை என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இந்த தரவுகள் கிடைக்கும். இடஒதுக்கீடு அதிகரிக்கும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

கஸ்தூரி திடீர் சவால்: இன்று முதல் நான் தெலுங்கானா சாரி.. ஆந்திரா பாலிட்டிக்ஸிலும் குதிக்கிறேன்…!

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தம்மை தெலுங்கு மக்களிடம் இருந்து பிரிக்க நினைப்பவர்களுக்கு பதிலடியாக ஆந்திரா அரசியலில் தாம் குதிக்கப் போவதாக நடிகை கஸ்தூரி சொடக்குப் போட்டு ஆவேசமாக பேசினார்.

பிராமணர்களை வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க..

அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.

இந்நிலையில் இவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் பாஜக அமர் பிரசாத் ரெட்டியும், நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லும் திக, திமுக, திமுகவுடன் வெட்கமே இல்லாமல் சேர்ந்திருக்கும் கட்சிகளைத்தான் அப்படி சொன்னேன். தெலுங்கு மொழி பேசும் மக்களை அப்படி நான் சொல்லவே இல்லை. நான் பேசியதை திரித்து எனக்கு எதிராக தெலுங்கு மக்களை திருப்பிவிட முயற்சிக்கின்றனர் என்றார்.

மேலும் இன்று முதல் நான் தெலுங்கானா சாரி.. ஆந்திரா பாலிட்டிக்ஸிலும் குதிக்கிறேன். நான் தமிழக பாலிட்டிக்ஸில் இன்னும் அறிவிக்கவில்லை. அதுக்கு முன்னாடி நான் ஆந்திரா பாலிட்டிக்ஸில் குதிக்கிறேன். என்னை ஏன் தெலுங்கு மக்கள் கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்தீங்கதானே.. ரொம்ப தேங்க்ஸ். வாய்ப்புக்கு நன்றி எனகஸ்தூரி தெரிவித்தார்.