பாலாறு குடிநீர் தங்களுக்கும் வேண்டும்… வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை..!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பெரும்பேடு கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் அருகில் உள்ள பாண்டுர் ஊராட்சி பாலாற்று கரையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் அமைத்து பெரும்பேடு கிராமத்திற்கு பாலாறு குடிநீர் கொண்டுவர மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கு பாண்டுர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெறவிடாமல் தடுத்தாக கூறப்படுகிறது. இதனால் டெண்டர் விடப்பட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நேற்று பெரும்பேடு கிராமத்திற்கு பாலாற்றில் இருந்து குடிநீர் வழங்க பணிகளை தொடங்க கோரி கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட வி.சி.க. செயலாளர் கனல்விழி தலைமையில் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கோமதி பெருமாள் புறக்கணித்து விட்டு கிராம மக்களுடன் சோ்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு எதிரொலி …! 16 ஆழ்துளை கிணறுகள், 34 மின் இணைப்புகள் துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 5 -ம் வகுப்பு மாணவி லியோரா ஸ்ரீ மீது தாயின் கண்ணெதிரே தண்ணீர் லாரி ஏறி இறங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

 

இந்நிலையில் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி லியோரா ஸ்ரீ பலியானதை தொடர்ந்து விபத்து நடந்த இடம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகள் நிற்கும் இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியர், மாணவியின் தாயார், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் மேடவாக்கம் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே பணிகள் முடிவடைந்துள்ள இடங்களின் நடுவில் தடுப்புகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்திடுமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவுறுத்தினார். மேலும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி நன்மங்கலம் ஏரி, கிணறுகளில் முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதை தடுக்க முறையற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறும் ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

அதன்படி அப்பகுதியில் உள்ள முறையற்ற 16 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 34 மின் இணைப்புகளை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மேற்பார்வையில் துண்டிக்கப்பட்டது. அத்துடன் தண்ணீர் லாரி மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைப்படுத்தப்படும் எனவும் ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்தார்.

தாயின் கண்ணெதிரே நடந்த கொடூரம்… தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு…!

செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி கீர்த்தி என்ற மனைவியும், லியோரா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கீர்த்தி சென்னை மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீவாரி வித்யாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் பணிபுரியும் அதே பள்ளியிலேயே அவரது மகள் லியோரா ஸ்ரீ 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில், நேற்று கீர்த்தி வழக்கம்போல் தனது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோவிலம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாகச் சென்றன.

இந்நிலையில், கீர்த்தி கோவிலம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் எதிரே சென்றார். அப்போது வாகனம் சாலையில் உள்ள குழியில் ஏறி இறங்கியது. இதனால், நிலை தடுமாறிய லியோரா ஸ்ரீ வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி லியோரா ஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதனால், லியோரா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால், இதை கவனிக்காத லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கினார். உடனே சாலையில் சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு, லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தி அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த சாலையில் இதுபோன்ற தண்ணீர் லாரிகள் அதிவேகமாக வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்யும்படியும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தண்ணீர் லாரி பள்ளி மாணவியின் மீது ஏறி இறங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

எஸ்.ஆர்.எம் கல்லூரி கல்லூரியில் காவல்துறை என மிரட்டி அட்மிஷன் கேட்ட போலி கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கல்லூரிக்கு காவல்துறையினர் போல் காக்கி பேண்ட், ஷூ அணிந்து வந்த நபர் ஒருவர் கல்லூரி வரவேற்பாளரிடம் நான் கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தனக்கு ஒரு எம்.டெக் சீட் வேண்டும் என்றும் அதுவும், ஸ்காலர்ஷிப்புடன் வேண்டுமென கேட்டுள்ளார். அங்கிருந்த கல்லூரி ஊழியர்கள் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். உடனே, அந்த நபர் காவல்துறை உதவி ஆய்வாளர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதில் குளறுபடி இருந்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே மற்றொருபுறம் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் அந்த நபரை பிடித்து அவரது அடையாள அட்டையை வாங்கி சோதித்ததில் அது போலி என தெரியவந்தது. பின்னர் மறைமலைநகர் காவல்துறை அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அப்துல் முஜீத் என்பது தெரியவந்தது. மேலும் டிப்ளமோ படித்த அப்துல்முகீத் கடந்த ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம், தான் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அப்துல் முஜீத் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் காவல்துறை உடையில் உதவி ஆய்வாளர் போன்று வளம் வந்த அப்துல் பலரை ஏமாற்றி் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று அப்துல் முஜீத் தனியார் கல்லூரியில் தான் உதவி ஆய்வாளர் என்றும் போலி அடையாள அட்டையை காண்பித்து கல்லூரி ஊழியர்களை மிரட்டி அட்மிஷன் கேட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்துறை அப்துல்முஜீத் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான போலி உதவி ஆய்வாளர் அப்துல் முஜீத் இதுபோன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த ஆய்வாளர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மகிதா அன்ன கிறிஸ்டி. இவர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்தபோது, காட்டாங்குளத்தூரை சேர்ந்த ஒரு பெண், ‘தனது 17வயது மகளை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித், என்பவர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்’ என கடந்த ஜூலை 2-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய காவல்துறை போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். முன்னதாக, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மகிதா அன்ன கிறிஸ்டி, சிறுமியின் தாயாரிடம் விசாரித்தபோது சிறுமிக்கு ஏற்கனவே இரண்டு‌முறை கருக்கலைப்பு செய்துள்ள அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதில் மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கருகலைப்பு செய்ததை கூறியுள்ளார்.

குறிப்பாக மலைமறைநகரில் உள்ள மருத்துவமனையில் சிறுமி கருவுற்றபோது மாத்திரைகள் வாங்கி கருக்கலைப்பு செய்ததாக கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி, மறைமலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் உமா மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி உள்ளார். மேலும், சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தில் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மாத்திரைகள் வாங்கி கருக்கலைப்பு செய்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்ற ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி, அரசு மருத்துவர் பராசக்தியிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

அப்போது சட்ட விரோதமாக 17-வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததற்கு வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். வழக்கு பதிவதை தடுக்க மறைமலைநகர் மருத்துவர் உமா மகேஸ்வரியிடம் இருந்து 2-லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் வெளியில் கசிந்து தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புகாராக சென்றுள்ளது. உடனடியாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டியை அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது மகிதா அன்ன கிறிஸ்டி பணம் பெற்றது உறுதியானதால் அவரை பணியிடை நீக்கம் செய்து, வாங்கிய பணத்தை திருப்பி அளிக்கவும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக அரசு மருத்துவர் பராசக்தி மறைமலைநகர் காவல் நிலையத்தில், தன்னை காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மிரட்டி பணம் பறித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இது தொடர்பாக ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மீது பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை அவரை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டியை பொன்னேரி அருகே கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம் கேட்ட தமிழர் கட்சி ஊராட்சி தலைவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார். சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அப்துல்லா அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ..25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறைருக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார். அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மாமூல் கேட்ட பாஜக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் ஜான்பாய் என்பவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து, அதில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றும் வேலையை அப்துல் காதர் மற்றும் அவரது மகன் முகம்மது பாசில் ஆகியோர் ரவிக்குமார் என்பவர் மூலம் மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாஜகவை சேர்ந்த 76-வது வார்டு வட்டத் தலைவர் ஜனார்த்தன குமார், திருவிக நகர் தொகுதி பொதுச் செயலாளர் தேவராஜ் மற்றும் திருவிக நகர் தொகுதி கிழக்கு மண்டலத் தலைவர் முரளி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து, கட்டிடக் கழிவுகளை எடுக்கும் முகமது பாசிலிடம், எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

உடனே முகம்மது பாசில் செல்போன் மூலம் அவரது தந்தை அப்துல் காதரை தொடர்பு கொண்டு ஜனார்த்தன குமாரிடம் செல்போனை கொடுத்து தனது தந்தையிடம் அவர் பேச வைத்துள்ளார். அவர் நாளை காலை 8 மணிக்கு வாருங்கள் நேரில் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்டிடக் கழிவுகளை எடுக்க விடாமல் தொடர்ந்து ஜனார்த்தனகுமார் மற்றும் அவருடன் வந்த தேவராஜ், முரளி ஆகிய மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜனார்த்தனகுமாரே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையிலான காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் மாமூல் கேட்டது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது. இந்நிலையில் திடீரென ஜனார்த்தன குமார் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் பொக்லைன் இயந்திரத்தின் ஹெட்லைட்டை அடித்து நொறுக்கி விட்டு சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் சந்தோஷ், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையிலான காவல்துறை, மாமூல் கேட்டு நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட ஜனார்த்தனகுமார், தேவராஜ், முரளி ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

கருக்கலைப்பு விவகாரம்.. 12 லட்சம் லஞ்சம் வாங்கிய .. பெண் ஆய்வாளர்…!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ரஞ்சித் என்பவர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் அடைய செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வழக்கு பதிவு செய்தார்.

17 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கியதாக ரஞ்சித்தை காவல்துறை கைது செய்தனர். அதேபோல் தனியார் மற்றும் அரசு மருத்துவர்களிடம் சென்று அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக காவல்துறையிடம் அந்த சிறுமியின் தாய் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஞ்சித் மீது போக்கோ வழக்கினை பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து கருக்கலைப்பு செய்யதாக கூறப்படும் அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யதாக 2 லட்சம் பணமும் என 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வாங்கியதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி வாங்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆய்வாளர் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.