அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட்ட பெண் கைது..!

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரை தெரியும், அந்த அதிகாரியை தெரியும்.. அவர் என் மச்சான்.. அவர் என் மாமா.. என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று பலர் லட்சக்கணக்கில் ஏமாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மீஞ்சூர், புங்கம்பேடு, பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு தனது உறவினர் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாக கூறி ஜோதி என்ற பெண் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்கள் என சுமார் 25 நபர்களிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் வரை திரட்டி ஜோதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ஜோதி யாருக்கும் வேலை வாங்கி தராமல் சதீஷ்குமாரை பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட மீஞ்சூர் வ.உ.சி தெருவை சேர்ந்த ஜோதி என்ற மாதுரி என்பவரை காவல்துறை கைது செய்தது.

அனுபவ சான்றிதழில் கையெழுத்திட ரூ 60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது..!

செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு பணி அனுபவ சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் லஞ்ச ஒழிப்புதுறை கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் திருவேங்கடம் தாலுகா செவல்குளத்திளுள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அந்த ஆசிரியை அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளியின் தாளாளரான நாகராஜ் என்பவரிடம் விண்ணப்பித்து உள்ளார்.

பணி அனுபவ சான்றிதழை தாளாளர் நாகராஜன் தயார் செய்துவிட்டு, தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளார். இதையடுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தாளாளர், லஞ்சம் ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமாரை சந்தித்து பேசியபோது, அவர் ஆசிரியரின் பணி அனுபவ சான்ழில் கையெழுத்து பெற்று அலுவலக நடைமுறைகளை முடித்து வழங்குவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி தாளாளர் நாகராஜ் இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணம் 60 ஆயிரம் ரூபாயை அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமாரிடம் பள்ளி தாளாளர் நாகராஜ் கொடுக்க அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆடையில்லாமல் வீடியோ காலில் + 2 மாணவி..! இன்ஸ்டாகிராம் காதலன் நண்பனுடன் கைது..!

+ 2 மாணவி ஆடையில்லாமல் வீடியோ காலில் இருந்த வைத்து மிரட்டிய இன்ஸ்டாகிராம் காதலன் நண்பனுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் செல்போனுடன் தூங்கி செல்போனில் கண்விழிக்கும் நிலைக்கு நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி நம்மை அழைத்து சென்றுள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் அதிகமான காரணத்தால் முன்பின் தெரியாத நபர்களிடம் இன்ஸ்டாகிராம் மூலம் உரையாடி பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்த கதைகள் தொடர் கதைகளாக தொடர்ந்து கொண்டே உள்ளது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி மகள் மல்லூர் அருகேயுள்ள உறவினர் வீட்டில் தங்கி மல்லூரிலுள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிஷோர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தினமும் இன்ஸ்டாகிராம் கடலை போட்டுள்ளார். இந்த கடலைக்கு நடுவே கிஷோர் மாணவியிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இத்தனை உண்மை என்று மாணவி நம்பி காதலித்து உள்ளனர். ருநாள் வீடியோ காலில் உடைகள் இன்றி வரவேண்டும் என்றதும் முதலில் மாணவி மறுக்க நாம் காதலர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என பேசி மாணவியை உடைகள் இன்றி வீடியோ காலில் கிஷோர் வர வைத்துள்ளான். அப்போது அதனை பதிவு செய்து வைத்துள்ளான். இந்நிலையில் நண்பன் முகமது அலியுடன் சேலம் வந்த கிஷோர் மாணவியை தனிமையில் இருக்க அழைத்துள்ளான். அதற்கு மாணவி மறுத்த நிலையில் ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இதையடுத்து அந்த மாணவி தனது தந்தையிடம் நடந்ததை கூற அழுதுள்ளார்.

விவசாயி தனது மகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இந்த எண்ணான 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு அழைத்து இருக்கிறார். என்னுடைய மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டுவதாகவும், அவரை தனிமையில் இருக்க வேண்டும் என அழைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த தகவல் உள்ளூர் காவல்துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் சிறுமி தங்கி இருந்த வீட்டை சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சுற்றித்திரிந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை பகுதியைச் சேர்ந்த லேப் டெக்னீசியன் கிஷோர் என்பதும், மற்றொருவர் எருக்கஞ்சேரி இந்திரா நகரை சேர்ந்த மெக்கானிக் முகமது அலி என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்வாண வீடியோக்களை வைத்து மாணவியை மிரட்டியதை ஒப்பு கொண்டுள்ளனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை இருவரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.

சில்லறை சண்டையில் பெண்ணிடம் சில்லறை தனமாக நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் கைது..!

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமில்லை என்று வடமாநிலப் பெண் வீடியோ ஆதாரங்களுடன் முகநூலில் பதிவிட்டதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலப் பெண் ஒருவர் சென்னையில், கோட்டூர்புரத்தில் படிப்பதற்காக வந்துள்ளார். கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்வதற்காக ரேபிடோ ஆட்டோவை புக் செய்துள்ளார். 163 ரூபாய் ரேபிடோ கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், அப்பெண்ணிடமும், ஆட்டோ ஓட்டுநரிடமும் சில்லறை இல்லாமல் இருந்துள்ளது. அந்தப் பெண் 200 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநருக்கும், வடமாநிலப் பெண்ணுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில், அப்பெண்ணுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த வடமாநிலப் பெண் முகநூலில் பதிவேற்றம் செய்து, சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் ஐ வாண்ட் மை மணி என்று கூறுகிறார். அதற்கு அந்தப் பெண் ஐ டோன்ட் ஹேவ் சேஞ்ச் என்று கூறி சில்லறை கேட்கிறார். சில்லறை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஸ்டுபிட், டோன்ட் ஷவுட் என்று கூறி அந்தப் பணத்தை அவர் மீது அப்பெண் தூக்கியெறிகிறார்.

இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் எச்சில் துப்பியும், ஆபாசமான வார்த்தைகளாலும் அப்பெண்ணை தாக்க முற்படுகிறார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் ஆண் நண்பர் இமெயில் மூலமாக அடையாறு சைபர் கிரைம் காவல்துறைக்கு வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ரேபிடோ ஆட்டோ ஓட்டுநரான பால்பாண்டியை காவல் துறையினர் கைது செய்தனர்.

காதலை கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக்கொலை செய்த அண்ணன் கைது

காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி தண்டபாணி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் மகள் வித்யா உள்ளனர். சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். சரவணனின் தங்கை வித்யா கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். வித்யாவும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வித்யா வீட்டிற்கு தெரியவந்தது. வித்யா வீட்டிற்கு வெண்மணி வந்து பெண் கேட்டுள்ளார்.

இந்நிலையில்,கடந்த 30-ஆம் தேதி வித்யாவின் வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ விழுந்த நிலையில் காயத்துடன் வித்யா சடலமாக கிடந்தார். பீரோ விழுந்து வித்யா இறந்திருக்கலாம் என பெற்றோர் நினைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் உடலை அடக்கம் செய்தனர். வித்யா உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட அவரது காதலன் வெண்மணி அதிர்ச்சியடைந்தார். மேலும் காதலியின் சாவில் மர்மம் உள்ளது என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல கிராம நிர்வாக அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லடம் தாசில்தார் சபரிகிரி, கிராம நிர்வாக அதிகாரி பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வித்யா உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதில் உடற்கூராய்வில் வித்யா தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வித்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறை விசாரணையை தொடங்கினர். வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வித்யாவை கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். விசாரணையில், எனது தங்கை மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவரது காதல் விவகாரம் தெரியவந்ததும் கண்டித்தேன். காதலை கைவிட வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால், தங்கை அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அறையில் வித்யா படுத்து இருந்தார். அப்போது, அரிவாளின் பின்பக்கத்தால் அவளது தலையில் பலமாக தாக்கினேன்.

இதில் அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதன்பின்னர் கொலையை மறைக்க பீரோ விழுந்து அவள் இறந்ததுபோல் சித்தரிக்க பீரோவை தலை மீது சாய்த்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து, சரவணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வரி ரசீது வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் கைது..!

பெரம்பலூரில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்கலாம். அரசு ஊழியர்கள் மீது ஒழிப்புதுறையினர் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள்.

சமீபக் காலமாக பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் கொடுத்து கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில் மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூரில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர்-ஆலம்பாடி சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் வீடு ஒன்றை கட்டியுள்ளார். வேல்முருகனின் நண்பர் பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சோ்ந்த ரெங்கசாமியின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரிடம் இந்த வீடு கட்டும் பணிகளை கவனித்து அனுமதி கொடுத்துள்ளார். மேலும் சுபாஷ் சந்திரபோஸ் மூலமாக வேல்முருகன், தனது புதிய வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் வரி வசூலிப்பவராக பணிபுரியும் புதுக்கோட்டை காவேரி நகர் எஸ்.எம்.காலனியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் இடைத்தரகரான பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்த ராமு ஆகியோர் சுபாஷ் சந்திரபோசிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபாஷ் சந்திரபோஸ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை சுபாஷ் சந்திரபோசிடம் லஞ்ச ஒழிப்புதுறை கொடுத்தனுப்பினார்கள். அதன்படி சுபாஷ் சந்திரபோஸ் நேற்று மதியம் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள நகராட்சி வரி வசூல் மையத்திற்கு சென்றார். அந்த ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை சிவக்குமார், ராமுவிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை சிவக்குமார், ராமு ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீமான் வீட்டின் காவலாளி கைது..! துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சீமானின் காவலாளி கைகளில் துப்பாக்கி இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறை, அதற்கான உரிமம் சரியாக இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று காவல்துறை விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமானின் காவலாளி காவல்துறையினரை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை, கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனிடையே சீமானின் வீட்டில் இருந்த காவலாளியின் கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் காவல் துறை தரப்பில் ஐபிசி 376-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்த புகாரை நடிகை திரும்ப பெற்றாலும், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன்பின் வழக்கு விசாரணைக்காக சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் காவல்துறை ஒட்டிய போது, மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் சில நிமிடங்களிலேயே அதனை கிழித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை, சம்மனை கிழித்தது யார் என்று கேட்டு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது காவல்துறையினரை உள்ளே அனுமதிக்க மறுத்த சீமானின் காவலாளி அமல்ராஜ், காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கியை நீட்டிய காவலாளி அப்போது காவல்துறையினரை தள்ளிவிட்ட காவலாளி அமல்ராஜ், தன்னிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து காவல்துறையினரை நோக்கி நீட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக காவலாளியை 2 பேர் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அதேபோல் காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.

புதிய மின் இணைப்பிற்கு ரூ.30,000 போதாது..! 2 லட்சம் கேட்ட வணிக கட்டிட ஆய்வாளர் கைது..!

லஞ்சம் வாங்குபவன் கையை வெட்டனும், ஊழல் பன்றவன தூக்குல போடனும், அரசியல் ஒரு சாக்கடை என்ற வீர வசனங்கள் பேசிக்கொண்டு சாமர்த்தியம் என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற யதார்த்தத்தில் அறத்தைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் திருக்குறள் உலகப் பொதுமறை, திருவள்ளுவர் என் முப்பாட்டன் என மார்தட்டிக் கொள்ளும் நாம் இன்று அரசு எந்திரத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றன. அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றும் கடை நிலை ஊழியரில் தொடங்கி, மிக உயர் பதவிகள் வகிப்பவர்கள் வரை பல்வேறு மட்டங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டுள்ளது.

பத்திரப்பதிவு, வருவாய்த்துறைகளிலேயே, அளவுக்கு அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக விளங்குகிறது. எனவே, இந்த துறையில் லஞ்ச புகார்கள் குவிந்து கொண்டிருக்க, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் கைதாகி கொண்டே இருப்பது தொடர்கதையாக ஒன்றாகும். ஆனால், கடந்த காலங்களில் மின்துறையிலும் பெருக்கெடுத்து ஓடி தொடங்கியுள்ளது.

இதன் ஒரு தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி கைதாகி இருந்தார். அதாவது நாராயணசாமி என்பவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெற போளூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை, கொழாவூர் VAO ராஜேந்திரன், நாராயணசாமிக்கு போனை போட்டு, ரூ.1,500 லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெறும் மனுவிற்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்வேன் என்றாராம். இதையடுத்து, நாராயணசாமி திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் தந்ததையடுத்து, கிராம உதவியாளர் ராஜேந்திரனை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

அது ஒருபுறமிருக்க கிருஷ்ணகிரியில், அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த, மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, வணிக கட்டிட ஆய்வாளர் பிரபாகரன் இருவரும், புதிய வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, புதிய இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால் 5,000 ரூபாயை ராஜேந்திரன் முதல் கட்டமாக தந்துள்ளார். ஆனால், மிச்சமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் செய்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ராஜேந்திரனிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

அந்த பணத்தை சிப்காட் மின்வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்ற ராஜேந்திரன், அங்கிருந்த உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார். அதை வாங்கி கொண்ட அவர்கள், இந்த பணம் போதாது, மொத்தம், 2 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்களாம். இவ்வளவையும் அங்கு மறைந்திருந்து கவனித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புதுறையினர், இரண்டு பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி கைது..!

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர், அமைப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சுங்கான்கடை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ராஜாவின் மனைவி அனுஷா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், எனது கணவரின் நண்பராக இருந்த, குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நங்கூரான் பிலாவிளையை சேர்ந்த சந்தை ராஜன் என்பவரிடம் கொரோனா கால கட்டத்தில் ரூ.1 லட்சம் கடனாக பெற்று இருந்தேன். 100 -க்கு 8 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் மாதம் ரூ.8000 கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழுதப்படாத காசோலை மற்றும் எழுதப்படாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இந்த தொகையை தந்தனர்.

இந்த தொகை்கு 2024-ம் வருடம் வரை மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை கட்டி உள்ளேன். அதன் பின்னரும் என்னிடம் பணம் கேட்டு சந்தைராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மிரட்டினர். திடீரென எனது வீட்டின் முன் நின்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான காரை திருடி சென்றனர். கடந்த 03.01.2025 அன்று என்னை செல்போனில் அழைத்து, மிகவும் அவதூறாக பேசி ஜாதி பெயரை கூறி, சந்தைராஜன் திட்டினார். மேலும் சந்தைராஜன் மற்றும் அவரது டிரைவர் ராஜேஷ், நண்பர்கள் அம்பிளி கண்ணன், சதீஷ் ஆகிய 4 பேர் என்னை மிரட்டினர் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு தொடர்பாக இரணியல் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கந்து வட்டி தடுப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சந்தைராஜன், அவரது டிரைவர் ராஜேஷ், நண்பர்கள் அம்பிளி கண்ணன், சதீஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சந்தைராஜன், அம்பிளி கண்ணன், சதீஷ் உள்ளிட்ட 3 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த ஆயுதப்படை காவலர் கைது..!

வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆயுதப்படை காவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சம்பத் வழுதரெட்டியைச் சேர்ந்த கடலூர் ஆயுதப்படை முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியன் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதால் யாருக்காவது அரசு வேலை கேட்டால் சொல்லுமாறு சம்பதிடம் தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து சம்பத் தனது மகன் ஞானவேல் BE முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை கேட்டு பாண்டியனிடம் அணுகியுள்ளார்.

அப்போது, பாண்டியன் உங்கள் மகனுக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி மேலும் சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்தும், ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பிய சம்பத் தெரிந்தவர், தெரியாதவர் என அங்கும் இங்கும் கடனை வாங்கி பாண்டியன் வங்கி கணக்கில் ரூ.4.50 லட்சம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டியன் வேலை வாங்கித் தராமல் இன்று, நாளை என இழுக்கடித்து உள்ளார்.

இதனால் மனம் நொந்துபோன சம்பத் வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் பணம் வரவில்லை ஆகையால் விழுப்புரம் குற்றப்பிரிவில் புகார் சம்பத் கொண்டார். இது குறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.