வாரிசு சான்றிதழ் வேண்டுமா ..! அப்ப.. 2000 கொடு..

திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து கிராமத்தை சேர்ந்த வரதராஜ் கடந்த 2003-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மனைவி அன்னலட்சுமி. இவர் தனது பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 27.7.2023 இணையதளம் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.ஆனால் அவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அன்னலட்சுமி தனது பேரன் கோபி நாகராஜ் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தத்தை பலமுறைநேரில் சந்தித்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தருமாறு கோபி நாகராஜிடம் கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி நாகராஜ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் ஆலோசனைப்படி கோபிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிரடி பணியிடை நீக்கம்

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ பரவியது. இதனையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், மாவட்ட இணை மருத்துவ இணை இயக்குநர் நேரில் சென்று, உணவக உரிமையரிடம் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மையென தெரியவந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.