வானதி சீனிவாசன் சூளுரை: தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும்..!

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 -ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும் என கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது, 27 -வது ஆண்டு அஞ்சலி கூட்டத்திற்காக இங்கு சேர்ந்துள்ளோம். 27 ஆண்டுகளாக எதற்கு திரும்ப திரும்ப மக்களுக்கு இதை கூற வேண்டியது ஏன் என கேட்கின்றனர். நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த கொடுஞ்செயல் மக்களுக்கு இன்னமும் ஆழமாக இருக்கின்றது. கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல. மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பாஜக இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம். இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம்.

பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் இங்கு இருக்கின்றார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் முதல்வர். இந்து கோவில்களுக்கும் வழிபாட்டிற்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் எந்த அரசியல் கட்சியும் வாயை திறப்பதில்லை. பாஜக பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றது என்கின்றனர். இதை வெளிநாடுகளில் யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டை பிரிப்பார்கள், மத கலவரம் செய்ய போகின்றனர் என பேசுகின்றனர். அரசியலில் வெற்றி பெற மத வாதத்திற்காக கையில் எடுப்பதாக சொல்கின்றனர்.

பாஜக பிரிவினைவாதம் செய்கின்றது என பேசும் கட்சிகள் எனது தொகுதிக்கு வாருங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுகின்றோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடு, மாறுபாடு காட்டுவதில்லை. பாஜக மத கலவரத்திற்காக அல்ல. தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும். அதுவரை தொடர்ந்து உழைப்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அண்ணாமலை கேள்வி: கையாலாகாத சுகாதாரத்துறை..! இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்..!?

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்து இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? மருத்துவர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்?

இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா?

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, திமுக கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? திமுக கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சேகர்பாபு பதிலடி முதலில் சட்டமன்ற உறுப்பினராக அண்ணாமலை ஜெயிக்கட்டும்..!

2026-ம் ஆண்டு நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்ய திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து , தமிழக முதல்வர் அண்ணாமலையை மண்ணைக் கவ்வச் செய்வார் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பிடுங்காமல் விடமாட்டேன்” என்று பேசியிருந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சேகர்பாபு, “அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள், அடங்கி மண்ணோடு மண்ணாக போனதுதான் கடந்தகால வரலாறு. எப்போதெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று புறப்படுகிறார்களோ, எப்போதெல்லாம் திமுகவை அழிப்பேன் என்று கூறுகிறார்களோ, அப்படி கூறுபவர்களின் அழிவுக்கான தொடக்கப்புள்ளிதான் அது என்பது பொருள்.

திமுகவின் ஆலயமாக கருதப்படுகின்ற, அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவரால் எப்படி செங்கல் கற்களை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த திமுக-வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும். இவர்களுடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் திமுக-வை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார்கள்.

2026-ம் ஆண்டு நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று முதலில் சட்டமன்ற உறுப்பினராக அண்ணாமலை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்ய திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து , தமிழக முதல்வர் அண்ணாமலையை மண்ணைக் கவ்வச் செய்வார்.” என சேகர்பாபு தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி: திமுகவை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும்..!

இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த திமுக-வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும்.” என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பிடுங்காமல் விடமாட்டேன்” என்று பேசியிருந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சேகர்பாபு, “அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள், அடங்கி மண்ணோடு மண்ணாக போனதுதான் கடந்தகால வரலாறு. எப்போதெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று புறப்படுகிறார்களோ, எப்போதெல்லாம் திமுகவை அழிப்பேன் என்று கூறுகிறார்களோ, அப்படி கூறுபவர்களின் அழிவுக்கான தொடக்கப்புள்ளிதான் அது என்பது பொருள்.

திமுகவின் ஆலயமாக கருதப்படுகின்ற, அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவரால் எப்படி செங்கல் கற்களை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு, 75 ஆண்டுகளைக் கடந்த இந்த திமுக-வை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வரவேண்டும். இவர்களுடைய ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் திமுக-வை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார்கள்.

2026-ம் ஆண்டு நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று முதலில் சட்டமன்ற உறுப்பினராக அண்ணாமலை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்ய திமுகவின் கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து , தமிழக முதல்வர் அண்ணாமலையை மண்ணைக் கவ்வச் செய்வார்.” என சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழிசை செளந்தரராஜன்: அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையானு பாருங்கள்..!

அண்ணனும், தம்பியும் சேர்ந்து காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பேசுவதை கேட்டு இருக்கிறேன். இன்று சொல்கிறேன்.. இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையா என்று பாருங்கள் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, என்னை இனி யாரும் உயரம் குறைவு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொண்டர்களால் உயர்ந்து நிற்பவள் நான்.

இது பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மட்டுமல்ல. இது 2026-ல் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முதல் கூட்டம் இது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் ஆயிரம் மருந்தகங்களை திறக்கப் போகிறார்களாம். இதைவிட காப்பியடிக்க கூடிய ஒரு முதல்வரை பார்க்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரதமர் மக்கள் மருந்தகங்களை திறந்து வைத்துவிட்டார்.

இம்முறை மருத்துவத்திற்கு அதிகளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கேன்சர் மருத்துவமனை கொண்டு வரப்படவுள்ளது. ஏனென்றால் இன்றளவில் 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் வருகிறது. அண்ணாமலை இருப்பதே சிலருக்கு பயமாக இருக்கிறது. அவர் இருந்தால், எங்களுக்கு வெற்றி என்று திமுகவினர் சொல்கிறார்கள். அண்ணாமலை இருந்தால் பாஜகவுக்கு வெற்றி என்று நாங்கள் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளோம். இப்போது பயத்தில் அவர்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். ஆன்மீகத்தை தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறது, காவி தான் தமிழகத்தை ஆளப் போகிறது.

பெரியாரை பற்றி தவறாக பேசினால் ஓட்டு கிடைக்காது என்று கூறுகிறார்கள். பெரியாரின் பெயருக்கு களங்கள் விளைவித்தால் ஓட்டு கிடைக்காது என்று கனிமொழியும் கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் போட்டிபோடுவதற்கு முன் நான், பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன் என்று கூறினேன். அதற்கு கனிமொழி, ட்விட்டர் ஐடியிலுள்ள பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பன மரத்தை வைத்தார்.

பெரியாரை விடவும் பனமரம் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் என்று கனிமொழி நினைத்தார். அதனை இன்று மாற்றி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி-க்கள் சமஸ்கிருதம், இந்தி என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு தமிழ்நாட்டு பெண் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அதற்காகவாது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமருக்கு மாலை போட வேண்டும்.

1967-ல் கலைஞர் பேசும் போது, அண்ணன் இருக்கிறார்.. தம்பி நான் இருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சேர்ந்து காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பேசுவதை கேட்டு இருக்கிறேன். இன்று சொல்கிறேன்.. இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையா என்று பாருங்கள். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு எப்போதும் அண்ணாமலையுடன் நானிருப்பேன். அண்ணா வளர்தத்து தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ், பெரியார் வளர்த்த தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.

போஸ் வெங்கட் சவால்: அண்ணா அறிவாலயத்தின் சுவரை சும்மா தொட்டுதான் பாருங்க..!

சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.

பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என அண்ணாமலை பேசியிருந்தார்.

இந்த அண்ணாமலையின் பேச்சுக்கு நடிகர் போஸ் வெங்கட் தமது எக்ஸ் பக்கத்தில், அறிவாலய சுவர் வெறும் செங்கலால் எழுப்பப்பட்டது அல்ல.. அது ஒவ்வொரு ஏழை தி. மு. க தொண்டனின் குருதி,நம்பிக்கை. நாளைய தலைமுறையின் அறிவுக்கூடம்.. வாருங்களேன் தோழர் அண்ணாமலை… /சும்மா தொட்டுத்தான் பாருங்களேன்.. / என நடிகர் போஸ் வெங்கட் எக்ஸ் பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.

அண்ணாமலை ஆவேசம்: அறிவாலயத்தின் அத்தனை செங்கலையும் உருவாம விடமாட்டேன்..!

“பா.ஜ.க தலைவராக முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால், நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்” என அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, அனைத்து மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும் இது போன்ற கூட்டம் நடத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் தான் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக் கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் என்றைக்கு திருவள்ளூர் சென்றாரோ, அப்போதே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் மோடி. 2014-ல் 3.45 கோடி பேர் வரி செலுத்தினார்கள். 10 ஆண்டுகளில், 7.90 கோடி பேர் வரி செலுத்துகின்றனர். 4.45 கோடி பேர் வரி செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். 7.90 கோடி பேரில் 6.80 கோடி பேர் ரூ.12 லட்சத்திற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்கள். அவர்கள் இந்த ஆண்டு வரி செலுத்த தேவையில்லை.

இதன்மூலம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைவார்கள். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான பட்ஜெட்டில் 5 முறை தமிழகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம் ரூ.8,054 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு ரூ.1,68,585 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டு காங்கிரஸின் கடைசி பட்ஜெட், 15 லட்சம் கோடி பட்ஜெட் தான். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பட்ஜெட் 50 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது வளர்ச்சி இல்லையா? காங்கிரஸ் ஆட்சியில் இந்தியனின் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.86,000. தற்போது பாஜக ஆட்சியில் ரூ.2,20,000. இது வளர்ச்சி இல்லையா?

காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில் மாநில நிதிப்பகிர்வு ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு, மாநில நிதிப்பகிர்வு, ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் கோடி. மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு 5 மடங்கு அதிகரித்துள்ளது. முதல்வரே எதற்காக பொய் பேசுகிறீர்கள்? வட்டிக்கடை நடத்துகிறீர்கள் என்று முதல்வர் கேட்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதிப்பகிர்வு கொடுக்கப்பட்டிருப்பது வட்டியா? ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது வட்டியா? விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவது வட்டியா? உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, மாநில அரசுக்கு உதவுவதற்காக, வட்டியில்லாக் கடன் கொடுப்பதை விமர்சிக்கிறார்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சி இருக்கும் வரையில் ஆளுநராக ஆர்.என். ரவியும், பாஜக மாநில தலைவராக அண்ணாமலையும் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களே பிரச்சாரம் செய்து நம்மை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்.” எனப் பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.

பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என அண்ணாமலை ஆவேசமாகப் பேசியுள்ளார்.

திமுக கண்டனம்: “தமிழகத்தில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி”

சென்னையில் “அகத்திய முனிவர் நடைபயணம்”என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டது, தமிழகத்தில் கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் சதி’ என திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சி.வி.எம்.பி.எழிலரசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு நேர் எதிரானது மத்திய பாஜக அரசு முன்வைக்கும் காசியின் ஒற்றை கலாச்சாரம். இப்படியிருக்க “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற பெயரில் ‘காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பாஜக அரசு நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் கரு பொருளாக ‘அகத்திய முனி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று சென்னையில் அகத்திய முனிவர் நடைப்பயணம் என்ற பெயரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைபயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி, மக்களின் ஒற்றுமையை சிதைத்து வரும் பாஜக தற்போது எதிர்கால தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவெறி நஞ்சினை விதைக்கத் தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்திய இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம்; தேசிய உணர்வை வளர்கிறோம் என்ற பெயரில் தங்களின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி அவர்களின் அறிவியல், பகுத்தறிவு சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பல்வேறு மாணவர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசு தற்போது ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் ஆன்மிகத்தின் பெயரால் மாணவர்களிடையே சாதிய, மதவாத உணர்வுகளை விதைக்கும் வஞ்சக செயலில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது.

உலக நாடுகள் அனைத்தும் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வரும் நிலையில், இங்குள்ள மத்திய பாஜக அரசு கல்வியில் மதத்தைத் திணிக்கும் பிற்போக்குத் தனத்துக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து சமத்துவ சமுதாயத்தை நிறுவிட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் தமிழகத்தில், கல்வியை காவி மயமாக்கும் பாஜகவின் இத்தகைய சதி திட்டத்துக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், அறிவியலுக்கு எதிரான பாஜகவின் மதவாதப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, திமுக மாணவர் அணி சார்பில் மாணவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என சி.வி.எம்.பி. எழிலரசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான்: திருப்பரங்குன்றத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு துணைபோகிறது?

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள தமிழர் மலையாம் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதில் இரு சமயங்களை பின்பற்றும் தமிழ் மக்களிடம் தற்போது உருவாகியுள்ள குழப்பங்களும், பூசல்களும் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வந்த வழிபாட்டில் திடீரென முரண்பாடுகள் தோன்ற இடமளித்திருப்பது வருத்தத்திற்குரிய கெடுநிகழ்வாகும்.

சதிகளை முறியடிப்போம் மதநல்லிணக்கத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் அடையாளமாகத் திகழும் தமிழ்நாட்டில் மதப்பூசல்களை உருவாக்க முனையும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு இனமானத் தமிழர்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது. ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகக் காலங்காலமாக இம்மண்ணில் நீடித்து நிலைத்து வாழும் தமிழர்கள் நாம்; ஒற்றுமையே நம்முடைய பலமென்பதை உணர்ந்து நிற்க வேண்டும். நம்மிடையே நிலவும் மாசற்ற பேரன்பையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்க உணர்வையும் ஒருபோதும் இழக்காது, மதவாதச் சக்திகளின் சதிகளை முறியடிக்க ஓர்மையோடு களத்தில் நிற்க வேண்டியது பேரவசியமாகும்.

சமூக அமைதிக்கு எதிரானவை குடமுழுக்கு நிகழ்வுகளுக்கு இசுலாமியச் சொந்தங்கள் வரவேற்றுப் பதாகைகள் வைப்பதும், கோயிலுக்கு வருவோருக்கு நீராகாரம் அளித்து உபசரிப்பதும், தர்கா, தேவாலயங்களின் நிகழ்வுகளுக்கு மற்ற சமயத்தவர் சென்று வழிபாடு செய்வதும் தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கப்பாட்டுக்கான சான்றுகளாகும். அதனைக் குலைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்துவிட்டு வாக்குவேட்டையாட முற்படும் மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் சமூக அமைதிக்கு எதிரானவையாகும்.

பாஜகவை வளரவிட்டு வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு? பல நூறு ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இரு சமயத்தவரும் சிறுமுரணுக்கும் இடங்கொடாது வழிபாடும், தொழுகையும் நடத்தி வரும் நிலையில், இப்போது தேவையற்ற பதற்றம் எப்படி உருவானது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? மண்ணின் நலனுக்காக மக்களோடு இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு, நீதிமன்றத்தில் கடும் வாதங்களை வைத்து அனுமதியைப் பெறாவண்ணம் தடுக்கும் திமுக அரசு, பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் ஒன்றுகூடலுக்கு மட்டும் வழியமைத்தது ஏன்? தொடக்க நிலையிலேயே, கூடுதல் கவனம் செலுத்தி, இரு தரப்பையும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தால், இப்படியான பதற்றச்சூழல் உருவாகியிருக்குமா? சிக்கலைப் பெரிதாக்கி, பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!

கனிமவள சூறையின் போது ஏன் வரவில்லை? ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என இன்றைக்குப் போராடுகிற பெருமக்களே! தமிழர் நிலமெங்கும் இருக்கும் குன்றுகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டித் தகர்த்து, கனிமவளங்களைச் சூறையாடும்போது எங்கே போனீர்கள்? அவற்றையெல்லாம. காக்க ஏன் வீதிக்கு வந்து போராடவில்லை? இம்மலை மீது வரும் பற்றும், பக்தியும் அந்த மலைகள் மீதும், குன்றுகள் மீதும் வராதது ஏன்? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் நம் மண்ணில் உள்ள மலைகளை குடைந்து கனிம வளங்களை கடத்துவதை எதிர்த்து நாங்கள் போராடும்போது நீங்கள் எதுவும் பேசாது கடந்து சென்றது ஏன்? மலைகளை காக்க வேண்டும் என்ற எங்களின் உரிமைக்குரல் அப்போதெல்லாம் உங்கள் செவிகளில் விழாமல் போனது ஏன்?

சித்திரை, கள்ளழகர் விழாக்கள் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவுக்கும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வுக்கும் இலட்சக்கணக்கான மக்கள் மதத்தைக் கடந்து ஒற்றுமையோடு கூடிக் குலவும்போது, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே நடந்தேறி வந்த வழிபாட்டை இவ்வளவு பெரிய முரணாக மாற்றி, சிக்கலாக உருவாக்கப்படுவதென்பது ஆளும் திமுக அரசின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை. இருதரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒரு சார்பான பேச்சும், பிரச்சினை மேலும் சிக்கலாக வழிவகுத்தது. அதனையே தற்போது மதவாதச் சக்திகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாசல் திறந்து விட்டுள்ளது.
மொத்தத்தில், திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிறது திருக்குரான்! ‘உன் மதம் பெரிது வழிபடு! என் மதமும் பெரிது வழிவிடு’ என்பதுதான் காலங்காலமாக தமிழர் மண் கடைபிடித்து வரும் மாந்தநேயமிக்க சமயப்பொறையாகும்.

குன்றுகளும் சமயங்களும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல் வழக்கு; அன்று தம் சீடர்க்கெல்லாம்,, அறிவுரை கூற எண்ணி,,, மன்றினை தொடங்கிய இயேசு பிரான் கல்வாரி குன்றின் மேல் ஏறி நின்றே கொடைக்கரம் விரித்து நீட்டியே அருள்நெறி பொழிந்தார்; நபி பெருமானருக்கு ஹிரா மலையின் மீதே புனித குரான் அருளப்பட்டது; கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவர்த்தன மலை, சிவபெருமானுக்கு கயிலை மலை, பார்வதிக்கு பர்வதமலை என எல்லா சமயங்களும் இறைவனோடு இயற்கையை பொருத்தியே போற்றுகிறது. மதமோதல் நிகழாத தமிழகம் வழிபாடு என்பதே பேரன்பு வெளிச்சத்தின் வெளிப்பாடாகும்.
எனவே, வழிபாட்டை வைத்து வன்முறைகளை உருவாக்கி மதவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்ற முயல்பவர்களுக்கு தமிழர் மண்ணும், மக்களும் ஒருபோதும் இடமளித்திடக்கூடாது. இந்திய பெருநிலம் முழுவதும் மதக்கலவரங்கள் நிகழ்ந்து பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, நாடே நரகமான கொடும் நாட்களிலும்கூட தமிழர் நிலம் மட்டும் தம் பல்லாயிரம் ஆண்டு பழமையான பண்பாட்டு முதிர்ச்சியாலும், மானுட நேயத்தாலும் மதமோதல் நிகழாமல் அமைதி காத்து உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது. பேசித் தீர்ப்போம்.
ஆகவே, என் உயிர் தமிழ்ச்சொந்தங்கள் ஒரு மொழி பேசி, ஒரு மண்ணில் பிறந்து, ஒரு தாய் வயிற்று மக்களாக வாழும் நாம், நமக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சிக்கலையும் நாமே பேசி நமக்குள் தீர்த்துகொள்ள முடியும். இருபுறமும் உள்ள சமயப்பெரியவர்கள் அதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்! திருப்பரங்குன்றம் மலையானது தமிழ் மக்கள் அனைவருக்கும் உரித்தானது என்ற உண்மையை ஒற்றுமையுடன் உரத்துச்சொல்வோம்! தமிழர் நிலம் எந்த காலத்திலும் மதப்பூசல் எழ இடமளிக்காது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்! என சீமான் தெரிவித்துள்ளார்.

L. முருகன் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் மோதல்..!

பாஜகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனத்தில் முறையாக தேர்தல் நடத்தாமல் எந்த அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். இந்த தலைவர் தேர்தலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவருக்கான போட்டியில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெய் சதீஷ், ஒரத்தநாடு கர்ணன் உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் பாஜக தெற்கு மாவட்ட தலைவராக ஜெய் சதீஷ் என்பவரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவித்தனர். ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்ட தலைவராக இருந்த ஜெய் சதீஷை எப்படி தேர்வு செய்யலாம். பட்டியலில் இல்லாதவர் பெயரை எப்படி அறிவிக்கலாம் என்று எதிர் தரப்பினர் தெரிவித்தனர். முறையாக தேர்தல் நடத்தாமல் எந்த அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். இந்த தலைவர் தேர்தலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள். மத்திய அமைச்சர் எல் முருகன் முன்னிலையிலேயே பாஜக நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.