வானதி சீனிவாசன்: வேல்முருகன் மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்..!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்களின் பொறுப்பையும், தவறையும் உணர்ந்து, மத்திய நிதியமைச்சர் குறித்த உங்களின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் பேசுகையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வையில், நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர்களை அடிப்படை மாண்பின்றி ஒருமையில் சாடியதோடு, சாதிய ரீதியாகவும் அவரைக் கீழ்த்தரமாக விமர்சித்த உங்கள் அநாகரிகப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

“ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை” என பெண் உரிமைகளைப் பறைசாற்றிய பாரதி பிறந்த மண்ணில், “பெண் அமைச்சர் அடக்கமாக இருக்கவேண்டும்” எனவும், “தயிர் சாதம் சாப்பிடும் மாமி” எனவும் பொது வாழ்வில் உள்ள ஒரு மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது. உங்களுடன் அரசியல் களமாடும் சக பெண் தலைவர்களைக் கொச்சைப்படுத்துமளவிற்கு ஆணவம் உங்கள் அறிவுத் திறனை மழுங்கடித்துவிட்டதா? இதுதான் நீங்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் லட்சணமா திரு. வேல்முருகன்?

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்களின் பொறுப்பையும், தவறையும் உணர்ந்து, மத்திய நிதியமைச்சர் குறித்த உங்களின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.