நயினார் நாகேந்திரன் சூசகம்: இரட்டை இலை மேலே தாமரை மலரும்”

“தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சூசகமாக பேசியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த பாஜக கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, “தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக கட்சியை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்ற அண்ணாமலைக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்று அறிந்து, அதை ஏற்று கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தேர்தலுக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

தலைமை சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். கூட்டணி குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தால், அது வேறு விதமாக போய்விடும். நமது கூட்டணி உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. வெற்றி கூட்டணி. இது தேர்தலுக்கான சந்தர்ப்பவாத கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் கூட விமர்சித்துள்ளார்.

நீங்கள் தான் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தலைமை வகிக்கிறீர்கள். எங்களது நியாயமான கூட்டணி, நேர்மையான கூட்டணி. ஊழல் இல்லாத கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும். பூத் கமிட்டியில் இருப்பவர்கள் வேலை செய்கிறார்களா என்று பாருங்கள். பூத்தை செம்மைப் படுத்தினால் தான் வெற்றி அடைய முடியும். எத்தனை தொகுதி, எப்படி கூட்டணி என்பதை எல்லாம் நாம் சொல்ல முடியாது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி சேர்ந்து முடிவு எடுப்பார்கள். எனக்கு அதிகாரம் தொண்டர்களை பாதுகாப்பது தான்.

எங்களது தொண்டர்களுக்கு காலில் அடிபட்டால், அது எனக்கு கண்ணிலே ஏற்படும் வலி போன்றது. நான் தொண்டர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சியை வளர்க்க வேண்டும். தமிழக அரசுக்கு அதிகாரம் வேண்டும், தமிழக மக்கள் அதிக பயன் அடைய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி வர வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது. கச்சத்தீவை பிரதமர் மோடி நினைத்தால் தான் மீட்க முடியும். இவர்கள் வெற்று தீர்மானம் போட்டு ஒன்றும் பயன் இல்லை.” எனப் பேசியுள்ளார்.