சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்..! மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்

சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தின் அமைதியைப் பேணிப்காத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்புப் பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காவல் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.509.49 கோடியில் 3,051 காவலர் குடியிருப்புகள், ரூ.59.75 கோடியில் 51 காவல் நிலையக் கட்டிடங்கள், ரூ.122.40 கோடியில் 18 காவல் துறை இதரக் கட்டிடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடியில் 253 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

காவல் துறை சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.380.98 கோடியில் 896 காவலர், தலைமைக் காவலர் குடியிருப்புகள் மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.76.15 கோடியில் 222 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் ரூ.457.14 கோடியில் கட்டப்பட உள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மேலும் கோவை மத்திய சிறைச் சாலையில் நிலவும் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு, சிறைத் துறை சார்பில் கோவை பிளிச்சி பகுதியில் முதல்கட்டமாக ரூ.211.57 கோடியில்ஆண்கள் சிறை, 111 சிறைக்காவலர் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் மதில் சுவர் ஆகியவற்றுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உள் துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ், சிறைத் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.