சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் தணியவில்லை. அதற்குள் புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்த வடமாநில மாணவியை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் புதுச்சேரி பொறியியல் கல்லூரி, சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி முதலாமாண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி இதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டடு இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கும்பல், அங்கிருந்த ஜோடியிடம் சென்று இங்கு என்ன செய்கிறீர்கள்? எதற்காக வந்தீர்கள் எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் மாணவனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மாணவியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளனர்.
அந்த மாணவி கும்பலிடம் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் மாணவியை மீண்டும் துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மாணவி கத்தி கூச்சலிட்ட, பயந்து போன அவர்கள் மாணவியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர் வடமாநில மாணவி என்பதால் காவல்துறைக்கு செல்ல பயந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே வந்தால் பல்கலைக்கழகத்துக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.