Mamata Banerjee rally: பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை..! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை முழக்கம் …!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்து முதுகலை 2-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.

பெண் மருத்துவர் வன்கொடுமை, கொடூர கொலை..! ‘இயர்போன்’ மூலம் கொலையாளி கண்டுபிடிப்பு..!

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக் கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கருத்தரங்கு கூடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. மருத்துவமனை வளாகத்தின் இதர பகுதி சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் கருத்தரங்கு கூடத்தில் நுழைந்துள்ளார். அப்போது அவர், ‘இயர்போனை’ காதில் மாட்டியிருந்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியேறி சென்றுள்ளார். அப்போது அவரது காதில் ‘இயர்போன்’ இல்லை. பெண் மருத்துவரின் உடல் அருகே ‘இயர்போன்’ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் சஞ்சய் ராய் பணியில் இருக்கும்போது இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. அவருக்கு 4 முறை திருமணமாகி உள்ளது. அவரது பாலியல் தொந்தரவை சமாளிக்க முடியாமல் அனைத்து மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர். பாலியல் வன்கொடுமையின்போது சஞ்சய் ராயிடம் இருந்து தப்பிக்க பெண் மருத்துவர் தீவிரமாக போராடி உள்ளார். குத்து சண்டை வீரரான சஞ்சய், பெண் மருத்துவரை மிக பலமாக தாக்கி இருக்கிறார். அவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பெண் மருத்துவர் கொலையில் நேர்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.