ஊட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை..!

பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்ற நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, உள்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி. இந்நிலையில், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள் புகார் அளித்து பல அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த ரஷியா பேகம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில் இப்பொழுது முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ரஷியா பேகம் தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் பணிபுரிந்த காலங்களில் பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் ரஷியா பேகம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீலகிரி மாவட்ட தலைநகரான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரஷியா பேகம் வசித்து வரும் வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 11 மணி வரை என 6 மணி நேரம் நடந்தது. சோதனையில் சில ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.60 லட்சத்திற்கும் மேலாக சொத்து சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

R.N. ரவி குற்றச்சாட்டு: காவல்துறையினர் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை..!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை காவல்துறையினர் மிரட்டியதால் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என ஆளுநர் R.N. ரவி குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்க, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டில் ஆளுநர் R.N. ரவி பேசுகையில், “இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. சிலர் ஊட்டி வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் மிரட்டப்பட்டனர். மாநில அரசின் காவல்துறையினர் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று கதவை தட்டி, நீங்கள் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர். மேலும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எதுவும் தெரிவதில்லை. ஆண்டுக்கு 6,500 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர்.

இவர்கள் ரூ.15,000 சம்பளத்துக்கு தினக் கூலிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் அரசு துறைகளில் ஏதாவது பணியில் சேருவதே இலக்காக இருக்கிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளது” என காட்டமாக R.N. ரவி தெரிவித்தார்.

விவசாய கடன் மானிய தொகையை ரூ.8 லட்சத்தை தனக்கு தெரிந்தவர்கள் கணக்கில் வரவு வைத்த அதிகாரி கைது..!

விவசாய கடன் மானிய தொகையை தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்த வைத்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்ததால், இவர் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சமீபத்தில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. இதில், மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கும் பிரிவில் மானியத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதில் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அதாவது பயனாளிகளுக்கு சேர வேண்டிய மானிய தொகையை அவர்களிடம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் முழு பணியையும் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

இந்த தணிக்கை செந்தில்குமார் ரூ.7,99,146 மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி தலைமை மேலாளர் ரமேஷ்பாபு ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செந்தில்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊட்டியில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். விழா காலங்கள் மற்றும் முக்கியமான நேரங்களில் இங்குள்ள பஜனை சபை கூடத்தில் வழிபாடு நடக்கும். இந்நிலையில் பஜனை சபை கூடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஊட்டி அனந்தகிரி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவரது மனைவி ஸ்வீட்டி பெட்ரீசியா என்பவர் பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ந் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார்.

இதன் பின்னர் பூஜை முடிந்து சாவியை ஒப்படைத்து விட்டார். இந்நிலையில் கோகுல்ராஜ் பஜனை சபை கூடத்திற்கு சென்றபோது அம்மன் கழுத்தில் அணியப்பட்ட 4 கிராம் தங்கத்தாலியை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 9-ந்தேதி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வந்த ஸ்வீட்டி பெட்ரீசியா தங்கத்தாலியை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காவல்துறை, ஸ்வீட்டி பெட்ரீசியாவிடம் இருந்த தங்கத்தாலியை மீட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில் ஊட்டி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் நேற்று ஊட்டி பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றதாக 20 கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

ஊட்டியில் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் அம்ரித் முன்னிலை வகிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது கயல்விழி செல்வராஜ் பேசிய, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8 லட்சம் பழங்குடியினர்கள் 37 வகையான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் இயற்கையை பாதுகாத்து, பழங்குடியினர் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கின்றனர். பழங்குடியினரின் எதிர்காலமான இளைஞர்களின் வளர்ச்சி தான் மிகவும் முக்கியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிநபர் உரிமைகள் பழங்குடியினர் நலத்துறை மூலம் 320 உண்டு உறைவிடப்பள்ளிகள், 48 விடுதிகள் செயல்படுகிறது.

இதில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஏகலைவா பள்ளிகளில் 2,600 மாணவர்கள் படிக்கின்றனர். வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாதி சான்றிதழ் பிரச்சினைகளை களையவும், உண்மை தன்மையை சரிபார்க்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,190 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாட்கோ தலைவர் மதிவாணன், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், தோடர் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவரும் பகல்கோடு மந்துக்குச் சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜீக்கு, பாரம்பர்ய முறைப்படி வரவேற்பு அளித்தனர் அந்த மக்கள். அவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறிந்தவர், அந்த இனப் பெண்களின் பூத்துக்குளி எனும் பாரம்பர்ய உடையை அணிந்து நடனம் ஆடினார். மேலும் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பர்ய உணவையும் சாப்பிட்டார்.

ஆதரவற்ற மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பஷீர் அகமது என்பவர் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஒட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் பஷீர் அகமது புதிய கட்டிடம் அருகே இருந்த நிலத்தையும் ஆக்கிரமிக்க முயன்றதாக மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 22-ந் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளான போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமது ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் அவர்மீது மூதாட்டி புகார் அளித்தது பஷீர் அகமதுவிற்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்து பூரண குணமடைந்து வீடு திரும்பிய பஷீர் அகமது மூதாட்டியை மீண்டும் நிலத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார்.

மேலும் யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயன்றது குறித்து மீண்டும் புகார் எழுந்துள்ளது. அதன் பேரில் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்த அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் மூதாட்டியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஊட்டி காந்தல் பகுதி கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து பிரார்த்தனை

உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் விதமாக கல்லறை திருநாளாக அனுசரித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கல்லறை திருநாளாக அனுசரித்து வரும் நிலையில், ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகளுக்கு சென்று, அங்கு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையில் மலர்கள், மெழுகுவர்த்திகள் வைத்து அலங்கரித்து, இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து பிரார்த்தனை செய்தனர்.