ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பா..!?

கர்நாடகா மாநில கருவூலத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்து பத்திரங்கள் 27 கிலோ தங்க நகைகள் உள்பட சுமார் 465 பொருட்களை தமிழக அரசிடம் இன்று கர்நாடகா ஒப்படைக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகளை குவித்ததாக 1996-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்த போது 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச், 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் அவரது போயஸ் தோட்ட வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்த நகைகள், பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்ப்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டே காலமாகிவிட்டதால் மற்ற மூவரும் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையை அனுபவித்தனர். மேலும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ 100 கோடி அபராதத்தை கைப்பற்ற அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளை ஏலம் விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மூவருக்கும் தலா 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக் கோரி ராமமூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடகா அரசு ஏலம் விடுவதற்கு பதில் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், நகைகளை அவர்கள் பெற்றுச் செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோகிராபர்கள் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட நீதிபதிகள் விதிமுறைகளை வகுத்திருந்தனர்.

இந்த சொத்துக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக அரசிடம் இந்த பொருட்களை ஒப்படைக்க இருந்த நிலையில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணனின் மகள் ஜெ. தீபாவும் மகன் ஜெ. தீபக்கும் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் ” அத்தை ஜெயலலிதாவின் சொத்து எங்களுக்கானது” என உரிமை கோரினர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் ஜெ. தீபாவின் மனுவை கடந்த ஜனவரி 13 -ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களும் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள் உள்பட 465 பொருட்களை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சரி பார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.