4 -ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை..! 4 பேர் கைது… தலைமை ஆசிரியை தலைமறைவு..!

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள மணப்பாறைபட்டி சாலையில் ஸ்ரீ குரு வித்யாலயா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தபள்ளியில் பயின்ற 4 -ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில் மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த மாணவியிடம் பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர்.

இருப்பினும் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் தலைமையிலான காவல்துறை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.