வைஷ்ணவி: உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள்.. என்னை வரவேற்பதும் என்னை தேற்றுகிறது…!

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது என தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் கூறி திடீரென தவெகவில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக்கொள்வதாக கூறி கட்சியில் இருந்து வைஷ்ணவி விலகினார்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் மற்ற துறைகளில் செல்ல விரும்பினால் ஆதரவு தெரிவிக்கும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குடும்பங்கள் அரசியலுக்கு செல்லும்போது ஆதரவு கொடுப்பதில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய உரிய அங்கீகாரத்தை வழங்கக்கூடிய கட்சி எது பாஜக என தெரிந்து கொண்டு சேர வேண்டும். அப்படிப்பட்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி மக்கள் பணி செய்ய பாஜவில் இணைந்து செயலாற்றலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்கள் பணி என்றால் அது மதிமுக மட்டுமே என்றும் தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இணைந்து பணியாற்றலாம் வாருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், வைஷ்ணவி எக்ஸ் பக்கத்தில், என்னைப் போன்ற இளம் பெண்களும் இளைஞர்களும் உங்களை போன்ற அனுபவம் மிக்கவர்களின் வழிகாட்டுதலோடு மக்கள் குரலாக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது. நன்றி அண்ணா! என பதிவிட்டுள்ளார்.

நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய்…! தவெகவிலிருந்து விலகும் வைஷ்ணவி..!

நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ.. என்று சொல்லி நிராகரித்தார்கள்உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது.”மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள் அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என வெளிப்படையாகவே மிரட்டுகிறார்கள் என கூறி தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த வைஷ்ணவி என்பவர் தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்தபோது ஏராளமான இளைஞர்கள் தவெகவில் சேர்ந்தவர்களில் ஒருவர்தான் வைஷ்ணவி. விஜய் கட்சி ஆரம்பித்தபோது அப்பகுதியில் தன்னை இணைத்தும் கொண்டார்.

இந்நிலையில் வைஷ்ணவி தவெகவிலிருந்துவிலகுவதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக வைஷ்ணவி வெளியிட்டுள்ள கடிதத்தில்,”என் மனதை கல்லாக்கிக்கொண்டு. இந்த கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றே தான். இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலறாதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடங்கினேன்.

ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து, கடந்த “மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்”. என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து. கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். சிறுவயதில் இருந்து நான் சிறுகச் சிறுக சேமித்த ரூ.5 லட்சம் பணத்தை மக்களுக்காகவும், குழந்தைகளுக்காவும் பல நலத்திட்ட உதவிகள் செய்து வந்தேன்.

ஆனால் கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும் உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கக்கூட எனக்கு அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன். மாநில அளவில் கட்சிக்காக உழைக்கும் எனக்கு பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்து, சென்னைக்குச் சென்று பொதுச் செயலாளரை சந்திக்கக் கூடாது.

மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் வரக்கூடாது. பொதுச் செயலாளரை சந்திக்க மேடை ஏறினால் “மனிதச் சங்கிலியால் நுழையவிடாமல் கீழே தள்ளிவிட்டது”. மாவட்ட நிர்வாகிகளை மீறி கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகங்களில் நேர்க்காணல் கொடுக்கக்கூடாது. சமூக வலைதளங்களில் நீங்கள் பேசக்கூடாது. போஸ்ட் போடக்கூடாது. “உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது.”மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள் அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என வெளிப்படையாகவே மிரட்டியது என தொடர்ந்து பல இடங்களுக்கு, கூட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன்.

இருப்பினும் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கட்சியின் வளர்சிக்காக என்னை சுதந்திரமாக மக்களைச் சந்திக்க விடுங்கள் என்று மட்டும் தான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அதற்கும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. “ஏன் என்னை நிராகரிக்கிறீர்கள்”, “நான் என்ன தவறு செய்தேன் என கண்ணீர் மல்க கேட்டபோது எனக்கு கிடைத்த பதில், “நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ.. என்று சொல்லி நிராகரித்தார்கள்.

ஒரு பெண் சமூக பிரச்சனையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் “நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்குபடுவது அனைவரும் அறிந்ததே. என்னையும் அந்த வார்த்தைகள் விட்டுவைக்கவில்லை. என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்”. கட்சிக்கு உண்மையாக என்னுடன் பணியாற்றிய அனைத்துத் தொண்டர்களுக்கும் நன்றிகள்” என வைஷ்ணவி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.