டாஸ்மாக்கில் “தம்பி” அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? மீண்டும் கேட்கிறேன்- யார் அந்த தம்பி? வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அண்மையில் டாஸ்மாக் எம்.டி. விசாகன், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது விசாகன் இல்லம் அருகே வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதில், ‘டியர் தம்பி’ என்று வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தொடங்குகின்றன. இதனை வைத்து தற்போது அதிமுகவினர் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை தமிழகத்தின் பல பகுதிகளில் யார் அந்த தம்பி? என்ற போஸ்டர்களை அதிமுகவினர் ஓட்டியிருந்தனர். இந்த போஸ்டர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை “தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது” என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. மு.க . ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு
வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,
உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை
தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன்
காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக
வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எது ஸ்டாலினின் கை?
அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.
ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!
ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் “SIR”களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.
தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!
7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்! அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!
இதற்கெல்லாம் பின்னர் வருவோம்…
நான் கேட்ட கேள்வி என்ன?
யார் அந்த தம்பி ?
உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?
உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?
டாஸ்மாக்கில் “தம்பி” அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.
உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!
உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!
ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
மீண்டும் கேட்கிறேன்- யார் அந்த தம்பி? என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.