பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்..! கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த போர்வெல் மெக்கானிக் மேகநாதன். இவர் தனது வீட்டுமனை பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார். இதனை பரிசீலித்து பெயர் மாற்றம் செய்து தருவதாக அவரிடம் கிராம நிர்வாக அலுவலரான கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேகநாதன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பலமுறை சென்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து தரவில்லை. அது குறித்து கேட்டபோது கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளரான பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத மேகநாதன் அது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாயை நேற்று மதியம் அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் தேன்மொழியிடம் மேகநாதன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாரிசு சான்றிதழ் வேண்டுமா ..! அப்ப.. 2000 கொடு..

திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து கிராமத்தை சேர்ந்த வரதராஜ் கடந்த 2003-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மனைவி அன்னலட்சுமி. இவர் தனது பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 27.7.2023 இணையதளம் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.ஆனால் அவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அன்னலட்சுமி தனது பேரன் கோபி நாகராஜ் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தத்தை பலமுறைநேரில் சந்தித்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தருமாறு கோபி நாகராஜிடம் கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி நாகராஜ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் ஆலோசனைப்படி கோபிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிரடி பணியிடை நீக்கம்

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ பரவியது. இதனையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், மாவட்ட இணை மருத்துவ இணை இயக்குநர் நேரில் சென்று, உணவக உரிமையரிடம் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மையென தெரியவந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.