திருச்சியில் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக 4 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பிற்கு கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீர், மோர் மற்றும் குளிர்பானங்களே காரணம் என அமைச்சர் கே.என் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார். திருச்சி உறையூர் 10 -வது வார்டு பகுதியில் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக 4 வயது சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன் தெரு , பணிக்கன் தெரு, காமாட்சி அம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று குடிநீர் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகின்றது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இவர்களை திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இன்று தமிழக சட்டசபையில் இந்த விவாதம் நடத்தப்பட்டது. குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை சரி செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கொடுத்தும், இதை சரி செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்கள் இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்தவுடன், அப்பகுதிக்குச் சென்று குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது கோடை காலம். மக்கள் குடிநீரை அதிகமாக பயன்படுத்தும் சூழ்நிலை இருப்பதால், அரசு தமிழ்நாடு முழுவதும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க அறிவுறுத்த வேண்டும்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ கட்டணத்தை அரசே வழங்கவும், இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம் அரசு உரிய கவனம் செலுத்த வலியுறுத்தி அமைகிறேன் போன்று பேசினார்.
இறுதியாக அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து பேசுகையில், திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் கிடைத்தவுடன் உடனடியாக அப்பகுதியில் 287 பேர் கொண்ட சுகாதார பணியாளர்கள் கொண்ட குழு அப்பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கியது.
10 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. அப்பகுதியில் வெக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு விநியோகிக்கப்படும் நீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் மூலமாகவே குழந்தை உட்பட 4 பேருக்கு உடல்நலத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கையிலும் அவை தெளிவாகியிருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் நாள் ஒன்றுக்கு 5½ கோடி மக்களுக்கு 4 ஆயிரம் எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை பொறுத்தவரையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது கழிவுநீரால் நிகழ்ந்தது அல்ல. அப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட நீர் மோர் மற்றும் குளிர்பானங்களால் நிகழ்ந்தது என அமைச்சர் கே.என் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.