“கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?” என மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்தார். கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று இரவு அந்தணர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, புரட்சித் தமிழகம் கட்சியை சார்ந்த ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்தார். அப்போது, “நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்று இல்லாத ஒன்றை முன்வைத்து தேசிய அளவில் தனது கருத்துக்கு நான்கு பேர் தேவை என தமிழக முதல்வர் கூட்டங்கள் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்று மத்திய அமைச்சருக்கு தெரியாததை கூட இவர்கள் பேசி வருகின்றனர். தொகுதி மறு சீரமைப்பு என மத்திய அரசின் திட்டத்தில் இல்லாதது. அதை இவர்கள் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்தியாவில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை. ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நான் தெலுங்கானாவில் வசிக்கிறேன். எனது குழந்தை படிக்கும் பள்ளியில் தெலுங்கு கட்டாயம். மற்ற மொழி பாடங்கள் அவரவர் விருப்பம் என உள்ளது.
மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என்று கூறினால் பிற பாடங்களை எப்படி மாணவர்கள் படிக்க முடியும்? கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா? இலகுவான முறையில் கற்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமே தவிர அதனை நீக்க முடியாது” என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.