பணி ஓய்வு பெறும் மின் பொறியாளரிடம் ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள் புகார் அளித்து பல அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதேநேரம் அரசு ஊழியர்களே சக அரசு ஊழியர்களே லஞ்சம் கேட்கும் பிரச்சனையில் சிக்குவதும் உண்டு.
இதிலும், குறிப்பாக ஓய்வு பெற போகும் அரசு ஊழியர்கள் பண பலனை பெற லஞ்சம் தர வேண்டிய நிலை ஆங்காங்கே அரங்கேறுகின்றது. இப்படித்தான் ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் ராஜேந்திரன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். வருகிற 30-ந்தேதியுடன் ராஜேந்திரன் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி ஓய்வுக்கால பணப்பலன்கள் கேட்டு அவர் கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்கிறார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக மேற்பார்வையாளராக பணியாற்றும், கள்ளக்குறிச்சி அஜிஸ்நகரை சேர்ந்த 50 வயதாகும் செந்தில்குமார் என்பவர், பணப்பலன்கள் தொடர்பான கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், இதுகுறித்து கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்தார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறைக அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை ராஜேந்திரன் எடுத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்த செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த பணத்தை அவர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரிய அலுவலர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.