போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ். கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான் ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான் ஜெபராஜ் மீது கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் ஜான் ஜெபராஜ் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜான் ஜெபராஜை காவல்துறை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை என்பதால் தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.
மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று காவல்துறை ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது. இவ்வாறு ஜான் ஜெபராஜை காவல்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறை ஜான் ஜெபராஜை கைது செய்தனர். அதன்பின்னர் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
ன்னர் மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.