தொழிலதிபர் மீது ‘ஹேமாஸ் கிச்சன்’ பெண் உரிமையாளர் மோசடி புகார்..

சென்னை, பெங்களூரு, திருச்சி மாவட்டம் சிறுகனூர் ஆகிய இடங்களில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் ‘ஹேமாஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹேமலதா, திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியசாமி டவர்ஸ் உரிமையாளர், பெரியசாமி தங்கராஜன் என்கின்ற பி.டி. ராஜன் என்பவருக்கு சொந்தமான, சிறுகனூரில் உள்ள இடத்தில் ரூ.52 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு உணவகம் நடத்த அனுமதி கொடுத்தார். ஆனால் தற்போது, உணவகத்தை நடத்த விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்.

மேலும் இரண்டாவது முறையாக அடியாட்களை வைத்து உணவகத்தை பூட்டிவிட்டார். இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பி.டி.ராஜன் மற்றும் அவரது அடியாட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!

சென்னை விருகம்பாக்கத்தில் பவானி என்பவருக்கு சொந்தமான 1,200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. நிறுவனம் நடத்துவதாக கூறி முதியவர் பவானி வீட்டை பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன் வாடகைக்கு எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு பின் வாடகையை சரியாக தராததால் முதியவர் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்துள்ளார். நேரில் சென்று பார்த்ததில் சிவா அரவிந்தன், 2 பேருக்கு தலா ரூ.8 லட்சத்துக்கு பவானி வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

மோசடி குறித்து முதியவர் பவானி அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்து காவல்துறை விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன், பலமுறை கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். முதியவர் பவானி அளித்த புகாரின் பேரில் பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தனை காவல்துறை மீண்டும் கைது செய்தது. முதியவர்களை குறிவைத்து அவர்களின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர்ந்து மோசடி செய்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்ப்பணம் கொடுத்த உளவுத்துறை துணை கமிஷனரிடம் திருடர்கள் கைவரிசை…!

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதன்படி, சென்னை அடையாறு இந்திரா நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ஒன்றிய உளவுத்துறை துணை கமிஷனர் ராஜீவ் நாயர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மெரினா கடற்கரைக்கு வந்தார்.

பிறகு விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரையில், கையில் கொண்டு வந்த தனது செல்போன், ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமம் அட்டை, பான் கார்டு, ரூ.1500 அடங்கிய பையை வைத்துவிட்டு, கடலில் இறங்கி துணை கமிஷனர் ராஜீவ் நாயர் தர்ப்பணம் கொடுத்தார். கரைக்கு வந்து பார்த்த போது, அவர் வைத்துவிட்டு சென்ற பை மாயமாகி இருந்தது தெரியவர துணை கமிஷனர் ராஜீவ் நாயர் புகாரின் பேரில் மெரினா காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

இடம் வாங்கி போட்டிருந்தால், அவ்வப்போது உங்கள் நிலத்தை போய் பாருங்க..!

சென்னையில் இடம் வாங்கி போட்டிருந்தால், அவ்வப்போது உங்கள் நிலத்தையும் கண்காணித்து கொண்டே இருங்கள் அந்த நிலத்திற்கு முறையாக பட்டா பெற்று வைத்துக்கொள்ளுங்கள். போலி பவர் பத்திரத்தை தயாரித்து உங்களுக்கே தெரியாமல் யாராவது உங்கள் நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இன்று சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 20-வது குறுக்குத் தெருவில் வசித்துவரும் ஆந்திர மாநில சேர்ந்த ராஜாராம் என்பவர் ஊறுகாய், முறுக்கு, பிஸ்கட் தயாரித்து கடைகளுக்கு வினியோகம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

ராஜாராம் உழைப்பால் சென்னை கொரட்டூர், மூகாம்பிகை நகரில் சுமார் 4800 சதுர அடி நிலத்தை வாங்கி போட்டிருந்தார். இந்நிலையில் கொரட்டூர், மூகாம்பிகை நகரில் இருந்த நிலங்கள் 2 வீட்டு மனைகளாக மாறி இருந்திருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. இதை கண்டு ராஜாராம் அதிர்ச்சி அடைந்தார். விஜி என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் பவர் பெற்று அதன் மூலம் மோசடி செய்ததை கண்டுபிடித்தார்.

இதுபற்றி புகார் அளிக்க ஆவடி காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்திற்கு போன ராஜாராம் அங்கிருந்த மத்திய குற்றப்பிரிவுக்கு பத்திர மோசடி குறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து புகாரை ஏற்று ஆவடி காவல் கண்கணிப்பாளர் சங்கர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில், உதவி கண்கணிப்பாளர் பொன்சங்கர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை நடத்திய விசாரணையில் அரியலூர் மாவட்டம், சின்ன வளையம், குடியாத்தம் தெருவை சேர்ந்த ஜோதி என்பவருடைய மனைவி விஜி தான் மோசடி செய்தது தெரியவந்தது. எப்படிப்பட்ட மோசடி என்றால், ராஜாராமின் தங்கை விஜி என போலியான ஆவணம் தயாரித்து, அதன்மூலம் ராஜாராம் தனது தங்கை விஜிக்கு பவர் கொடுத்ததாகவும் மாற்றி இருக்கிறார்.

அதன் பின்னர் விஜி அதை வைத்து சென்னை கொளத்தூர் திருமலை நகரை சேர்ந்த கொத்தசுப்புராயுடு, ஆந்திர மாநிலம் மதில்மேடு பொன்னியம்மன் தெருவை சேர்ந்த பழனி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அஜய் ஆர்சாட் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் ராஜாராமுக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளையும் 3 ஆக பிரித்து விஜி விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை விஜியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

எஸ்.வி.சேகர்: அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம்.. நடைபயணம் கூட டாக்டர் அட்வைஸா இருக்கும்.. !

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் மூத்த நிர்வாகிகளுக்கு அண்ணாமலை மரியாதை கொடுத்து, எதையும் ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசல் புரசலாக இருந்து வந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டை எஸ் வி சேகர் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

அண்மைக்காலமாக அண்ணாமலையை எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ் வி சேகர் கூறுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக நானும் செய்திகளில் பார்த்தேன். அனேகமாக அவருக்கு சுகர் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. தினமும் நடக்க வேண்டும் என டாக்டர் கூறியிருக்கலாம். அதனால் தான் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். எனவே நடைப்பயணத்தால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.

சும்மாவே மிஸ்டு காலை வைத்துக் கொண்டு எங்கள் கட்சியில் இத்தனை பேர் உள்ளனர் என கூறுவதெல்லாம் நம்மை நாமே புகழ்ந்து கொள்வது. தற்போது நடைபெறும் ஆபரேஷன், தேர்தல் முடிவான போஸ்ட்மார்டத்தில் தெரிந்து விடும். பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார். பாஜக 300 இடங்களுக்கு மேல் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தும். ஆனால் இது அண்ணாமலை உதவியால் கிடையாது. இவ்வாறு எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்தார்.

ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றத்திற்கு யார் காரணம்..?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கடந்த ஓராண்டாக தலையில் ரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போதிலும் சரி ஆகாததால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தங்கள் குழந்தையை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு மருந்து ஏற்றுவதற்காக கையில் டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் வலது கை அழுகத் தொடங்கியது. தவறான டிரிப்ஸ் போட்டதே இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாகியது.

இதையடுத்து, அந்தக் குழந்தை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்தக் குழந்தையின் அழுகிய கையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுமார் 2 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கை அகற்றப்பட்டது. ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியை சேர்ந்த லட்சுமி, இவரது கணவர் ஞானம். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமியின் மாமனார் செல்வராஜ் காலமாகிவிட்ட நிலையில், கணவர் ஞானத்துக்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக லட்சுமி தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் வெகு நாட்கள் ஆகியும் சான்றிதழ் கொடுக்காமல் வருவாய் அலுவலர்கள் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து முறையிட்டபோது, லட்சுமியிடம் பேசிய அலுவலக உதவியாளர் ஒருவர் சான்றிதழ் கிடைக்க வேண்டுமென்றால் தாசில்தாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி தனக்கு தெரிந்த சமூக ஆர்வலரை அழைத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் சென்ற நிலையில், நகையை அடகு வைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அலுவலக உதவியாளர் தனசேகர் சான்றிதழ் கிடைத்து விடும் எனக்கூறியதை லட்சுமியுடன் சென்ற நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை கட்டிப்போட்ட.. பாஜக பெண் நிர்வாகி கைது…

குழந்தைகள் வண்ணங்கள் முதல் எழுத்துக்கள் வரை முதல்முதலாக மழலையர் பள்ளியில் தான் குழந்தைகள் தான் பார்க்கின்றன. அங்கு அவர்கள் பார்க்கும் உலகம் இனிமையானதாக இருக்க அவர்களின் கல்வி அடிப்படைக்கு அஸ்திவாரம் போடும் இடம் மழலையர் பள்ளி.

ஆனால், குழந்தைகள் எவ்வளவு குறும்பு செய்தாலும், எந்த காரணம் கொண்டும் அடிக்கவே கூடாது. குழந்தைகளை அடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையை தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் கடுமையாக இருக்கிறது. மேலும் மழலையர் பள்ளிகள் எளிதாக ஆரம்பிக்க முடியாது, கடுமையான விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ள மீனாட்சி என்பவர் சிட்கோ நகர்ப் பகுதியில் மை பாட்டி வீடு என்ற மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார். மீனாட்சி நடத்தி வரும் மழலையர் பள்ளியில், ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் 7 வயது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் சிறுவன் படித்து வருகிறான். சிறுவன் மழலையர் பள்ளியில் சேர்ந்ததில் இருந்தே தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக சக ஊழியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு கூறியுள்ளார்களாம்.

இதையடுத்து தனது குழந்தை துன்புறுத்தப்பட்டது குறித்து மழலையர் பள்ளி உரிமையாளர் மீனாட்சியிடம் பெற்றோர் கேட்டனராம். அதற்கு அவர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் சரண்யா புகார் அளித்தார்.

அதன் பேரில் பள்ளிக்கு சென்று காவல்துறை விசாரணை செய்ததில், பள்ளி நிர்வாகி மீனாட்சி சிறுவனை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளதாக கருதினர். இதையடுத்து, மழலையர் பள்ளியின் உரிமையாளரும் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.

பள்ளிச் சீருடையில் தலைமை ஆசிரியுடன் விமானத்தில் பறந்த மாணவி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை – வள்ளுவரின் கூற்றிற்கு இணங்க தேசிய திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துயுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணவநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேசிய திறனறிவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாணவநல்லூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை எனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா அறிவித்திருந்தார்.

இதையடுத்து தேர்வில் மிருணாளினி என்ற எட்டாம் வகுப்பு மாணவி திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைக் கண்டு தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியை தேர்வின் போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு பெறுவார்கள் என்பதற்காக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று ஒப்புக்குக் கூறியதாக மாணவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற அந்த தலைமை ஆசிரியை அமுதா வெற்றி பெற்ற மாணவி மிருநாளினியை பள்ளிச் சீருடையுடன் வாணவ நல்லூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கி மாணவியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்று மாணவியை அளவில்லாத சந்தோஷத்தை அடையச் செய்தார்.