செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி ஆடு, ஓநாய் குறித்து…! அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்..!

‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கருத்து குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அவரது தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவரின் ஆணைப்படி, ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறுகிறது. பொதுவாக, ஜெயலலிதாவின் நினைவு நாளில், அனைவரும் சென்னை சென்று அஞ்சலி செலுத்துவோம். இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாளை, அந்தந்த பகுதிகளில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் கொண்டாடி வருகிறோம்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் ‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியது’ குறித்து’ செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஆடு, ஓநாய் குறித்து அவர் சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என செங்கோட்டையன் பதில் அளித்தார்.

எடப்பாடி கூட்டத்திற்கு நோ..! ஸ்டாலின் கூட்டத்தில் “ஆஜர்” செங்கோட்டையன்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சிக் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுஎன ஒன்று உள்ளது. இதில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும், தொகுதிகள் வாரியாக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தப்படும். எனவே இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று இந்த மாநில வளர்ச்சி குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொல். திருமாவளவன், துரை. வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் மாநில வளர்ச்சி குழுவில் உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையனும் இதில் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிற்கு செல்லாமல் முதலமைச்சர் தலைமையிலான குழுவுக்கு மட்டும் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, பேசிய செங்கோட்டையன் மாநில வளர்ச்சி குழுவில் நானும் உறுப்பினர். அந்த முறையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டும் நான் கலந்து கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.

செல்லூர் ராஜூ விளக்கம்: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன் பிரச்சனை..! அண்ணன் – தம்பி பிரச்சனை..!

செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சனை அண்ணன் – தம்பி பிரச்சனையை போன்றது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்களான MGR மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதனால் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால் அதிமுக இருக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும். ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இடையில் எவ்வளவு பிரச்சனைகள் வரும்.. அதன்பின்னரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் பிரச்சனையை பெரிதுபடுத்த தேவையில்லை.

அடுத்து 202ல் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்கிறோம். அதிமுகவில் எந்த உட்கட்சி விவகாரமும் தூக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின், யாராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன்.. சாட்டையை சுழற்றுவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால் விஜய்-தான் சாட்டையை சுழற்றுவதாக போட்டுள்ளார்கள். செங்கோட்டையன் அண்ணன் எங்களின் மூத்த சகோதரர். MGR, ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். அவர் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டாரா? ஆனால் காவலர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விட்டுவிட்டு கேட்காத ஒருவருக்கு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு ஓட விட்ட செங்கோட்டையன்..!

இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய பகுதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படங்களும் பெரிதாக ஒரே அளவில் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது.

எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, நான் புறக்கணிக்கவில்லை. அதைப்பற்றி தற்போது நிறைய பேர் பேசி வருகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன்.

காவல்துறை பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை. கோபப்பட்டது இல்லை. ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாகப் பார்த்தவன் நான். ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் கை அசைக்கும்போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். ஏன் கழற்றி விட்டார் எனக் கேட்பார்கள். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது, அதையெல்லாம் சொன்னால் தவறாகப் போய்விடும்.

ஏன் செங்கோட்டையனுக்கு கட்சியில் 2 பெரிய பொறுப்புகளை தந்தேன் என ஜெயலலிதா சொன்னது இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. “எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா கூறினார். தொடர்ந்து, தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசும் ஆடியோ ஒன்றையும் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். “இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்.” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டுக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். நான் என்றைக்கும் என்னை தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் தொண்டன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதில் இருந்து நீங்கள் என்னை புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்” என செங்கோட்டையன் பேசினார்.