மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் இளைஞர் ஒருவர் தைரியமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 16 -ஆம் தேதி மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அந்த வழியாக 3 -ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தேர்வு முடித்து வீடு திரும்பி உள்ளார். அப்போது சாலையோரம் பொறுத்தப்பட்டு இருந்த மின் மீட்டர் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு மழை நீரில் நடந்து சென்ற மாணவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் துடித்த பள்ளி சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி உள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் என்ற இளைஞர் தன் உயிரை பணயம் வைத்து அந்த சிறுவனை மீட்டு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர் உயிருக்கு போராடுவதும் இளைஞர் கண்ணன் தைரியமாகவும் தனது உயிரை பற்றி கவலையில்லாமல் துரிதமாக செயல்பட்டதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பள்ளி சிறுவனை உயிரை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.