தமிழ்நாட்டில் காலாவதியான 27 சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்று..!

தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76-வது மகா சபைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் உள்ள 937 சுங்கச்சாவடிகளில் 486 சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளும் காலாவதியானவையாகும்.

காலாவதியான சுங்கச்சாவடிகளில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 2036-ஆம் ஆண்டு வரை சுங்கக்கட்டணம் வசூல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது சம்பந்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் லாரிகள் பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால், வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே நியாயமான போராட்டத்தை முன்னெடுக்க லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.

இல்லை என்றால் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த விஷயத்தில் இனி மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்தார்.

மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை: தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்..!

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், தமிழகத்தில் 56 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்கச்சாவடிகள் காலாவதியான சுங்கச்சாவடிகள். இந்த சுங்கச் சாவடிகளை அகற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7 லட்சம் லாரி உரிமையாளர்களை காப்பாற்ற வேண்டும். சுங்கசாவடியில் சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தபடுவது துரதிஷ்டவசமானது. இது உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

பெட்ரோல், டீசலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையை தவிர, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணமாக பெட்ரோல், டீசலுக்கு முறையே லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.2 வரை மத்திய அரசு வசூலிக்கிறது. 2021-2022-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,08,49,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 7,66,59,000 மெட்ரிக் டன் டீசல் விற்பனை செய்யப்பட்டு உள்கட்டமைப்பு, மேம்பாட்டு நிதியாக ரூ. 2,70,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடி சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வசூலிக்கப்பட்ட பிறகு சுங்கசாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது.

ஆகவே நாடு முழுவதும் அனைத்து சுங்கசாவடிகளிலும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்க கட்டணம் வசூலிக்கும் 26 சுங்க சாவடிகளையும் மூட வேண்டும். மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து மும்பைக்கு 150 கி.மீ இந்த சாலையில் ஒரு சுங்கச் சாவடி மட்டுமே உள்ளது. டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு 260 கி.மீ-க்கு 3 சுங்கச் சாவடிகள் மட்டுமே உள்ளன. ஆனால் தமிழகத்தில் செங்கல்பட்டிலிருந்து மீஞ்சூர் 60 கி.மீ-ல் 6 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. செங்கல்பட்டிலிருந்து மாதவரத்திற்கு 5 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. தமிழகத்தின் உள்ள லாரி உரிமையாளர்கள் தொழில் செய்வது கடினமாக உள்ளது.

மேலும் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டும். வண்டலூர் டூ மீஞ்சூர் உட்பட மாநில நெடுஞ்சாலையிலுள்ள கோலப்பஞ்சேரி, வரதராஜபுரம், பாலவேடு, மிஞ்சூர் சுங்கச் சாவடிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீதம் சுங்க வரியை குறைத்து தர வேண்டும். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சதவீதம் சுங்க வரியை குறைக்க வேண்டும். லாரி தொழிலை பாதுகாக்க விரைவில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கை மனுவை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.