ரோஜா கண்காட்சியில் சுற்றுலா பயணி புகைப்படம் மற்றும் செல்பி மகிழ்ச்சி

நாளையுடன் முடிவடையும் ஊட்டி ரோஜாப் கண்காட்சியில் சுற்றுலா பயணி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜாப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி ரோஜாப் பூங்காவில் கண்காட்சியும் நடைபெறும்.

அதன்படி, தோட்டக்கலைத் துறை சார்பில் 20-வது ரோஜா கண்காட்சி ஊட்டி ரோஜாப் பூங்காவில் நேற்று தொடங்கியது. அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 80 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு இரு டால்பின்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பென்குயின், சிப்பி, நத்தை, மீன், கடல் குதிரை, நீலத்திமிங்கலம், ஸ்நைல், நட்சத்திர மீன், கடல் கன்னி, உள்பட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களை செய்து வைத்துள்ளனர். மேலும் 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பலவண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலாபயணிகள் திரண்டனர்.

இன்று 2-வது நாளாக கண்காட்சி நடந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலாபயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு பூத்து குலுங்கிய ரோஜா பூக்களை பார்த்து ரசித்தனர். மேலும் ரோஜாக்களால் செய்யப்பட்ட மலர் அலங்காரங்கள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை..!

பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்ற நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, உள்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி. இந்நிலையில், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள் புகார் அளித்து பல அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த ரஷியா பேகம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த நிலையில் இப்பொழுது முள்ளிகூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ரஷியா பேகம் தூனேரி, நஞ்சநாடு ஆகிய ஊராட்சிகளில் பணிபுரிந்த காலங்களில் பட்டா மாற்றம் உள்பட பல்வேறு வருவாய்த் துறை பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் ரஷியா பேகம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீலகிரி மாவட்ட தலைநகரான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரஷியா பேகம் வசித்து வரும் வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 11 மணி வரை என 6 மணி நேரம் நடந்தது. சோதனையில் சில ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.60 லட்சத்திற்கும் மேலாக சொத்து சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

விவசாய கடன் மானிய தொகையை ரூ.8 லட்சத்தை தனக்கு தெரிந்தவர்கள் கணக்கில் வரவு வைத்த அதிகாரி கைது..!

விவசாய கடன் மானிய தொகையை தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்த வைத்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூனியர் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்ததால், இவர் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சமீபத்தில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. இதில், மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கும் பிரிவில் மானியத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதில் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அதாவது பயனாளிகளுக்கு சேர வேண்டிய மானிய தொகையை அவர்களிடம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் முழு பணியையும் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

இந்த தணிக்கை செந்தில்குமார் ரூ.7,99,146 மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி தலைமை மேலாளர் ரமேஷ்பாபு ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செந்தில்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் பறிமுதல்..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையர் அவர்கள் கட்டிடங்கள் புனரமைப்பதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக ஜஹாங்கீர் பாஷா மீது அதிகம் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து தனியார் வாடகை காரில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஊட்டி-கோத்தகிரி சாலையில் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர், சிலரிடம் லஞ்சம் பணம் பெற்று கொண்டு செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அந்த காரை விரட்டி சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கி சோதனையிட்டனர். அப்போது அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை ஊட்டி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று சுமார் 13 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது அலுவலக அறையில் இருந்து ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழங்குடியினர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி…! ஆட்சியர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக நடையாய் நடந்தும் பயனிலை…!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி ஊட்டி விவசாய நிலத்தை ஒருசிலர் அபகரித்ததாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலை முயற்சி நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் ஊட்டி அருகே கோக்கால் கிராமம் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த மோகன் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 13 வயது மகள் உள்பட 6 பேருடன் வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் திடீரென தங்களின் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறை உடனடியாக அவர்கள் 6 பேரையும் தடுத்து நிறுத்தி தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தற்கொலைக்கு முயன்ற மோகன் குமார் கூறிகையில், கோக்கால் பகுதியில் எங்கள் தாய் வழி சமூகம் மூலம் எனக்கு பாத்தியப்பட்ட பாரம்பரிய நிலத்தில் 6 ஏக்கரை ஒருசிலர் ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நிலத்தின் சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எங்களது பெயரில் உள்ளது. இதுகுறித்து காவல் நிலையம், ஆர்.டி.ஓ., ஆட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் சுமார் 40 சென்ட் நிலத்தில் கேரட் பயிரிட்டோம். ஆனால் ஒருசிலர் கேரட்டை அழித்துவிட்டு அவர்கள் தற்போது அவரை பயிரிட்டு உள்ளனர். நாங்களோ எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களோ பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும் பழங்குடியின நிலத்தை பழங்குடியின சமுதாயம் அல்லாத ஒருவர் வாங்கியுள்ளார். எனவே போலியாக நடந்த பத்திரப்பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார்.