இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான GSLV-F15 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..!

ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான GSLV-F15, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. NVS-02 என்ற 2,250 கிலோ எடையில் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து துல்லிய தகவல் தரும் வழிகாட்டும் வகை செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100-வது ஏவலுக்கு தயாராக வைக்கப்பட்ட ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவுக்கு ‘GPS ’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (IRNSS) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

இதற்காக IRNSS வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் இப்போது சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து IRNSS திட்டத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அந்தவகையில் IRNSS-1H-க்கு மாற்றாக NVS-01 செயற்கைக்கோள் 2023 மே 29-ல் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது IRNSS-1H செயற்கைக்கோளுக்கு மாற்றாக அதிநவீன NVS-02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் GSLV-F15 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவ கவுன்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று காலை 6.23 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

S. Somanath: இஸ்ரோவுக்கு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது என்று அதன் தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், இந்தியா இதுவரை 97 ராக்கெட்களை ஏவி யுள்ளது. மேலும் 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அதன் சுற்றுப்பாதைகளில் சுற்றி வரச் செய்துள்ளது. இஸ்ரோவுக்காக மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும், அதைவிட 2.54 மடங்கு கூடுதல் முதலீடாக நமக்குத் திரும்பக் கிடைத்து வருகிறது. இதன்மூலம் இஸ்ரோவுக்காக செலவு செய்யும் தொகை அனைத்தும் நமது நாட்டின் விண்வெளி துறை மேம்பாட்டுக்காக பயன்படுகிறது.

ஏழை அல்லது பணக்காரர் என்ற வித்தியாசமின்றி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் இஸ்ரோ தொட்டுள்ளது. இஸ்ரோவுக்காக செலவழிக்கும் தொகையானது, சமூகத்துக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் உடனடியாக உதவுகிறது என சோம்நாத் தெரிவித்தார்.

அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 9.17 மணியளவில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக மொத்தம் 176 கிலோ எடை மற்றும் ஓராண்டு ஆயுட்காலம் கொண்ட அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இது தரையில் இருந்து 475 கி.மீ.தொலைவில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை கொண்டது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் (SiC UVDosimeter) ஆகிய 3 ஆய்வுசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும்.

இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் யுவி கதிர்வீச்சு அளவைகண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களைவிண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது.

மேலும், எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ளும். இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப்இந்தியா ஸ்டார்அப் நிறுவனம் வடிவமைத்துள்ள 200 கிராம் எடை கொண்ட ‘எஸ்ஆர்-டெமோசாட்’ எனும் நானோ செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.