காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி தண்டபாணி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் மகள் வித்யா உள்ளனர். சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். சரவணனின் தங்கை வித்யா கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். வித்யாவும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வித்யா வீட்டிற்கு தெரியவந்தது. வித்யா வீட்டிற்கு வெண்மணி வந்து பெண் கேட்டுள்ளார்.
இந்நிலையில்,கடந்த 30-ஆம் தேதி வித்யாவின் வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ விழுந்த நிலையில் காயத்துடன் வித்யா சடலமாக கிடந்தார். பீரோ விழுந்து வித்யா இறந்திருக்கலாம் என பெற்றோர் நினைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் உடலை அடக்கம் செய்தனர். வித்யா உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட அவரது காதலன் வெண்மணி அதிர்ச்சியடைந்தார். மேலும் காதலியின் சாவில் மர்மம் உள்ளது என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல கிராம நிர்வாக அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பல்லடம் தாசில்தார் சபரிகிரி, கிராம நிர்வாக அதிகாரி பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வித்யா உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதில் உடற்கூராய்வில் வித்யா தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வித்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறை விசாரணையை தொடங்கினர். வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வித்யாவை கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். விசாரணையில், எனது தங்கை மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவரது காதல் விவகாரம் தெரியவந்ததும் கண்டித்தேன். காதலை கைவிட வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால், தங்கை அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அறையில் வித்யா படுத்து இருந்தார். அப்போது, அரிவாளின் பின்பக்கத்தால் அவளது தலையில் பலமாக தாக்கினேன்.
இதில் அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதன்பின்னர் கொலையை மறைக்க பீரோ விழுந்து அவள் இறந்ததுபோல் சித்தரிக்க பீரோவை தலை மீது சாய்த்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து, சரவணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.