தொல் திருமாவளவன்: மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

மதுரை ஆதீனத்தின் பேட்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து சமூகத்தை தூண்டும் வகையில் இது உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் அனைததுலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ள காரில் சென்ற மதுரை ஆதீனம் ஞான சம்பந்த தேசிய பரமாச்சாரியார் கார் உளுந்தூர்ப்பேட்டை சேலம் ரவுண்டானாவை கடந்து சென்றபோது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், கார் சேதமடைந்து, காரில் தூங்கிக் கொண்டிருந்த ஆதீனம் காயமின்றி உயிர் தப்பியதாகவும் சொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “தொடர்ந்து சமூகப்பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதால், வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கலாம்” விபத்தை ஏற்படுத்திய நபர்கள் குல்லா அணிந்திருந்தார்கள், தாடி வைத்திருந்தார்கள் என இஸ்லாமியர்கள் அவர்கள் என்பதை மறமுகமாகக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மதுரை ஆதீனம் வாகன விபத்து விவகாரத்தில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும், மதுரை ஆதீனத்தின் கார் தான் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளது என தமிழக காவல் துறை விளக்கம் அளித்தது. மேலும், அதுதொடர்பாக காவல் துறை வெளியிட்ட CCTV-யில், மதுரை ஆதீனம் கார்தான் மற்றொரு கார் மீது உரசிச் செல்வது தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CCTV காட்சிகள் வெளியானதை அடுத்து பொய் தகவல்களை பரப்பி மதக் கலவரம் உண்டாக்க முயற்சித்த மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை, கோவை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், “மதுரை ஆதீனம் உயிருக்கு ஆபத்து என்று வெளியான தகவல் உண்மையில் அதிர்ச்சியை அளித்தது. அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், காவல் துறை வெளியிட்ட சிசிடிவி காட்சிகளில் அவ்வாறான கொலை முயற்சி சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை, அது இயல்பாக நடைபெற்ற ஒரு விபத்து என்று தெரிய வந்துள்ளது.

மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள மடாதிபதி, சமூக பதற்றம் ஏற்படாத வகையில் பொறுப்புடன் கருத்து சொல்ல வேண்டிய கடமைப்பட்டவர். சமூக அமைதியை நிலைநாட்டுவதில் அவருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், தன்னை கொல்ல முஸ்லீம்கள் முயற்சி செய்தனர், இதற்கு பின்னால் பாகிஸ்தான் சதி உள்ளது என்று எல்லாம் பேசியது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சியாகவும் இது உள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து சமூகத்தை தூண்டும் வகையில் இது உள்ளது. இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை தூண்டும் குற்றச் செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் மதுரை ஆதீனத்தின் பேட்டியை சாதாரணமாக கடந்து சென்றுவிடக்கூடாது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

போக்குவரத்து காவல்துறையினர் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது..!

சென்னையில் போக்குவரத்து காவல்துறை சாலையில் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழகத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் அணியாதது, வாகனங்களை வேகமாக ஓட்டுவது, பைக்கில் வித்தை காட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது என தினந்தோறும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை நாம் காண முடிகிறது.

சென்னையில் வாகன ஓட்டிகள் பலரும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு வழிச் சாலையில் கூட வாகனங்களை எதிர்ப்புறமாக வேகமாக ஓட்டுகின்றனர். போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து பொதுமக்கள் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், சென்னையில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் காவல்துறை அபராதம் வசூலிக்கின்றனர். வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இ – செலானும் கொடுக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் இ-செலானை வாங்கி விட்டு அபராதம் கட்டாமல் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து காவல்துறை ஈடுபடும்போது காவல்துறை இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை இயக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து காவல்துறை கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் சோதனை நடத்தும் போக்குவரத்து காவல்துறை கும்பலாக நின்று சோதனை மேற்கொள்வது குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து காவல்துறை வாகன சோதனையில் ஈடுபடும்போது கும்பலாக நிற்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் மட்டுமே வாகன சோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்றும், உதவி காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சாலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏறி விபத்து, அலட்சியமாக சென்ற SSI -யின் மகன்

திருச்சி சாலையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது அந்த வழியாக புல்லட்டில் வந்த 10-ஆம் வகுப்பு மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது புல்லட் ஏறி விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த விபத்திற்கு காரணமாக மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது பைக்கை ஏற்றிவிட்டு நான் கே.கே.நகர் SSI முருகராஜ் மகன் என்று சொல்லிவிட்டு அலட்சியமாக சென்றான். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.

விபத்து வழக்கை விசாரிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மணிமங்கலம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் வந்த பைக் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் காரின் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் நொறுங்கிய காரை அங்கிருந்து பொத்தேரியில் இயங்கி வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்டவர் எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் விபத்து குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் முதலில் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் பேரம் பேசப்பட்டதையடுத்து, கடைசியாக உரிமையாளர் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக காவலர் ஜெய்கணேஷ் என்பவருக்கு கொடுத்துள்ளார். இதில் காவலர் ஜெய்கணேஷ் லஞ்சம் பெறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.