ஜாதி பெயரை சொல்லி தாக்குதல் நடத்தப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வரும் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த தவெக கிளை செயலாளரை நாமக்கல் மாவட்டச் செயலாளர் குமரவேல் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் முறையாக கொடுத்த புகாரினை மாற்றி எழுதிக் கொடுக்கச் சொன்ன புதுச்சத்திரம் காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து குமரவேல் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூர் பஞ்சாயத்து, பனங்காடு தவெக கிளைச் செயலாளர் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த கவின் குமார் என்பவர் புதுச்சத்திரத்தில் ஹரி மொபைல்ஸ் என்ற செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார்.
கவின் குமார் கடந்த 06.07.2026 அன்று மாற்று சமுதாயத்தைச் சார்ந்த கண்ணூர்பட்டி பகுதியில் வசித்து வரக்கூடிய மதன்குமார் என்பவர் தனது அவசர தேவைக்காக சில நாட்களில் திருப்பித் தருவதாகவும் கூறி கவின் குமாரிடம் ரூபாய் 2,110/- வாங்கி இருந்திருக்கிறார். மதன் குமார் சொல்லியபடி திருப்பித் தராத காரணத்தால் கவின் குமார் பணத்தை எப்போது தரப் போகிறீர்கள் என்று பலமுறை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.

அதன் அடிப்படையில் கடந்த 26.08.2026 அன்று இரவு சுமார் 09:30 மணி அளவில் தொலைபேசியின் மூலமாக பேசிக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஆகவே கவின் குமார் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுகிறது. மறுநாள் அதாவது 27.08.2026 காலை ஹரி மொபைல்ஸ் கடை உரிமையாளர் வெங்கடாசலம் என்பவரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு எங்கே கவின் குமார் என்று மதன் குமார் கேட்டிருக்கிறார் அதற்கு உரிமையாளர் இன்னும் கடைக்கு வரவில்லை என்று கூறி எதற்காக கவினை கேட்கிறாய் என்று உரிமையாளர் கேட்கவே அதற்கு மதன்குமார் கவினை அடிக்காமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடும் தொனியில் பேசியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் கவினுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மதன்குமார் இப்படி தொலைபேசி மூலமாக பேசுகிறான் என்ன நடந்தது என்று உரிமையாளர் கேட்கவே நடந்த சம்பவங்களை சொல்லிவிட்டு இதோ வேலைக்கு வருகிறேன்.
வழக்கம் போல காலை 11:00 மணிக்கு கண்ணூர்பட்டி வழியாக கவின் குமார் சான்ட்ரோ கார் TN30 J 6414 என்ற வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது கண்ணூர்பட்டி அடுத்து பொடங்கம் அருகேயுள்ள விநாயகர் கோவில் அருகில் பின் தொடர்ந்து வந்த மதன்குமார் கார் கதவைத் தட்டி வண்டியை நிறுத்துடா என்று வண்டியை வழிமறித்து நேத்து நைட்டு போன்ல ஓவரா பேசுற ஏண்டா … தே… மகனே காரை விட்டு இறங்குடா என்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டி என்னை சல்லி பையன் என்று பேசுற அளவுக்கு சக்கிலி பையனுக்கு தைரியம் வந்துடுச்சா இப்ப பேசுடா.
என்று சொல்லி கையில் போட்டு இருந்த காப்பினை எடுத்து எனது மூஞ்சிலும் மூக்கிலும் சரமாரியாக அடித்து கீழே இறங்குடா என்று எனது உடைமைகளை இழுத்து சேதப்படுத்தி கிழித்து செருப்பு காலால் உடைத்து, தலை முடியை பிடித்து கார் ஸ்டேரிங்கில் அடுத்து, எனது கழுத்தை பிடித்து மூச்சு விடாத வகையில் அழுத்தி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று சரமாரியாக அடித்து கொலை வெறி தாக்குதல் ஏற்படுத்தி உள்ளார்.
சாலையில் சென்ற பொதுமக்கள் உடனடியாக மதன்குமாரிடமிருந்து கவின்குமாரை மீட்டு உடனடியாக புதுச்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி செய்யப்பட்டு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதனால் மேல் சிகிச்சைக்காக 108-ல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 27-8 -2026 அன்று ஆம் தேதி மதியம் சுமார் 1:15 மணி அளவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் கிடைக்கப்பெற்ற உடன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் இருந்து காவல் நிலைய அதிகாரி 27/08/2026 அன்று மாலை சுமார் 7:00 மணி அளவில் நடந்த சம்பவங்கள் சார்ந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று தகவலை பெற்று விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். அப்போது, தான் ஒரு பட்டியல் இன சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும், என்னை சாதியை சொல்லி திட்டி, இழிவு படுத்தி கையிலே போட்டிருந்த காப்பை கழட்டி மூஞ்சிலையும், தலையிலையும் அடித்து செருப்பு காலால் உதைத்து, பொது இடத்தில் பொதுமக்கள் பார்வையில் கொலைவெறி தாக்குதல் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து என்னை அவமதித்தார் என்று புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், மனு பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 2 நாட்களாக புகார் சார்ந்து வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி ஆதிக்க சாதி மனநிலை கொண்ட நபர்களுக்கு புதுச்சத்திரம் காவல் துறையினுடைய அதிகாரிகள் உடந்தையாக சென்று 27-ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட கவினிடம் புதுச்சத்திரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் P. மோகன்ராம் அவர்கள் நீ ஏற்கனவே கொடுத்த புகார் மனு வேண்டாம் அதில் சாதி என்ற பெயரெல்லாம் வருகிறது.
எனவே நான் சொல்வதைப் போல எழுதி கொடுத்து இருவரும் சமரசமாக சென்று விடுங்கள் என்று சட்டத்திற்கு புறம்பாக ஒரு பொது ஊழியர் என்கின்ற பொறுப்பை உணராமல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கக்கூடிய பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த கவின் குமாரை கட்டாயப்படுத்தி 29-ஆம் தேதி அதாவது நேற்று காலை 8:00 மணி அளவில்தான் தகவலே கிடைத்தது என்று உண்மைக்கு மாறான தகவலை பெற்றுக் கொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் P.மோகன்ராம் அவர்கள் சாதியவாதிகளுக்கு உடந்தையாக சென்று சட்ட ரீதியாக முறையான வன்கொடுமை வழக்கில் உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், BNS -யில் சுமார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துவிட்டு இதுவே ஒரு பெரிய கேஸ் தான் என்று புதுச்சத்திரத்தின் உடைய காவல் சிறப்பு துணை ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் கூட்டு சதி செய்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து, காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தவெக நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பாதிக்கப்பட்ட பட்டியல் இன சமுதாயத்தைச் சார்ந்த அதே கட்சியினுடைய பனங்காடு கிளைச் செயலாளர் கவின்குமார் கொடுத்த புகார் மீது வன்கொடுமை வழக்கெல்லாம் பதிவு செய்ய வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்டவரை நான் நேரில் போய் பார்த்து பேசிக்கொள்கிறேன் என்றும், இந்த சம்பவத்தை பொருத்தவரை இருவருக்கும் இடையே நடந்த ஒரு பிரச்சனையாக மேலோட்டமாக வழக்கு பதிவு செய்ய சொன்னதாக தவெக புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராகவேந்திரன் கூறி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
எனவே முறையான விசாரணை மேற்கொண்டு வன்கொடுமை நிகழ்த்திய நபர்களுக்கு ஆதரவாகவும், வன்கொடுமை வழக்கை நீர்த்துப்போக செய்யக்கூடிய வகையில் செயல்பட்ட நபர்கள் மீது வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை மெத்தனப் போக்கோடு கையாண்ட நாமக்கல் மாவட்ட காவல்துறையையும், புதுச்சத்திரம் காவல் துறையையும் தமிழ்ப்புலிகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என தமிழ்ப்புலிகள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிக்சை பெற்றுவரும் தவெக கிளைச் செயலாளர் கவின் குமாரை தமிழ்ப்புலிகள் கட்சி நாமக்கல் மாவட்டச் செயலாளர் குமரவேல் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராஜா மற்றும் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.