மு.க . ஸ்டாலின்: கொடநாடு வழக்கிற்கும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் பொள்ளாச்சி வழக்கு போல குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என மு.க . ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் அரசு முறைபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்.

மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதலளித்தார். அப்போது, உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என 2019 தேர்தலின்போது வாக்குறுதியாகவே சொன்னேன். யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.

சொன்னது போல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். அதேபோல், சட்டமன்ற கூட்டத்தில் கூட அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி என்று கூறினேன். இது தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. செல்லூர் ராஜூ ஒரு கோமாளி. அவர் சொல்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக இருந்தது. அதற்கு தான் ஆதரவு தெரிவித்தோம்.

எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித் ஷாவை சந்தித்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் நான் சொல்லிதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், 10 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். தொடர்ந்து இதுபோன்ற பொய், பித்தலாட்டத்தை செல்வதே அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது அதற்கும் தானே காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? என பார்ப்போம் என   மு.க .  ஸ்டாலின் தெரிவித்தார்.