சிம்லாவுக்கு அடுத்தபடியாக அதிநவீன உயிர் சிகிச்சை மருத்துவமனையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்

சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசங்களில் அதிநவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். கடந்த காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்புகள் இல்லாததால் அவசர சிகிச்சைகள் பெற நீலகிரி வாழ் மக்கள் சமவெளி பகுதியான கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என கூறியிருந்தார்.அதன்படி உதகை அருகே HPF பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் 700 படுக்கை வசதியுடன், 415 மருத்துவ ஊழியர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று கோயம்புத்தூர் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கோயம்புத்தூர் இருந்து சாலை மார்க்கமாக உதகமண்டலம் சென்றடைந்தார்.உதகமண்டலத்தில் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசங்களில் அதிநவீன உயிர் சிகிச்சை பெறும் வகையில், அதிநவீன மருத்துவ கருவிகளுடன் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.