அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் உயிரிழப்பு..!

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் மாடுபிடி இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு தமிழர் திருநாளை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் நேற்று காலை 6.30 மணி அளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுக்க, வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதில் மாடுபிடி வீரர்கள் 31 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், 19 பார்வையாளர்கள் காவலர்கள் 4, ரிப்போர்ட்டர் ஒருவர் என ஆகமொத்தம் 65 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் கலந்து கொண்டார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.