பாரா ஒலிம்பிக் இந்திய வீரர் வினோத்குமாரின் பதக்கம் பறிப்பு கரணம்..?

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 6-வது நாளான ஆண்கள் F52 வட்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் 3-வது இடம் பிடித்ததால், வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் வினோத்குமார் உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்தது. இதனால், வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பக் குழுவினர் மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடு மதிப்பீட்டில் தகுதியற்றவர் என்று அறிவித்ததால் வினோத்குமார் வெண்கலம் திரும்பப் பெறப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்வு TTV தினகரன் கண்டனம்

பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்கள் தலையில் அடுத்தடுத்த சுமையை ஏற்றுவது வேதனைக்குரியது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் 4 மினி டைடல் பார்க்

தமிழக சட்டசபையில் தொழில்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், இந்திய திறன் அறிக்கையின்படி அதிக வேலைவாய்ப்புள்ள மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. வேலை வாய்ப்பை அதிகம் அளிக்கும் நகரங்களில் முதல் 10 நகரங்களில் சென்னை உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் பூங்காக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நில வங்கிகள் உள்ளன. தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி அந்த மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதன் மூலம் நிலக்கையிருப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சிப்காட் நிறுவனத்தால் புதிய நில வங்கிகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்குவதற்காக அந்தந்த நாட்டுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த தொழில் நகரியங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிலாநத்தம், அல்லிகுளம், வேலாயுதபுரம், நெல்லை கங்கைகொண்டான், திருவண்ணாமலை மேல்மா, ராணிப்பேட்டை பனப்பாக்கம், கிருஷ்ணகிரி சூளகிரி, குருபரப்பள்ளி, திருவள்ளூர் செங்காத்தாக்குளம், காஞ்சீபுரம் வல்லப்பாக்கம், மதுரமங்கலம், சிவகங்கை இலுப்பைக்குடி, தேனி பூமாலைக்குண்டு, நாகை வண்டுவாஞ்சேரி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி (விரிவாக்கம்) ஆகிய 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா, தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருள் தொழில்பூங்கா, திண்டிவனம் மற்றும் தேனியில் உணவுப்பூங்கா, மாநல்லூரில் மின்வாகனப்பூங்கா ஆகியவை அங்குள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் உருவாக்கப்படும். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஒன்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அமைக்க சிப்காட் நிறுவனம் உத்தேசித்துள்ளது. சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 50 ஆயிரம் சதுரஅடி கட்டுமானத்துடன் வர்த்தக வசதி மையத்தை இம்மாதத்தில் அமைத்து தொடக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களை டைடல் நிறுவனம் அமைக்க உள்ளது. மற்ற நகரங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் ‘வலிமை’ என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்டை இந்த ஆண்டு வெளிச்சந்தையில் அறிமுகம் செய்ய டான்செம் நிறுவனம் உத்தேசித்துள்ளது என தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற 8-வது நாள் விளையாட்டில் இந்திய தரப்பில் ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் சிங்ராஜ் அடானா 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.மகிழ்ச்சியில்  சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி

இதேபோல ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கதையும், ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய 2 தங்கம் , 5 வெள்ளி 3 வெண்கலம் என ஆகமொத்தம் 10 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் இந்திய 30-வது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு நேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த மகிழ்ச்சியை சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறியதுடன் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஆப்கானிஸ்தான் புதிய அரசுக்கு சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் // பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பின் தலைமைச் செயலதிகாரி டேவிட் பீஸ்லியை இஸ்லாமாபாதில் சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக நாடுகள் தலிபான்களுடன் ஆக்கபூா்வமான நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே அந்த நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கான நிவாரண உதவிகளை அளிக்க முடியும் என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகும், அந்த நாட்டுடன் சா்வதேச நாடுகள் உறவைப் பேண வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டில் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுவதற்கு சா்வதேச நாடுகள் அனுமதிக்கக் கூடாது.

ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை நீடித்திருக்க வேண்டுமென்றால், புதிய அரசுக்கு சா்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகள் குறித்து சா்வதேச சமுதாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ள 30 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்துள்ளது. இந்த நிலையில், அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் அகதிகள் மீண்டும் வெளியேறுவதற்கான சூழலை சா்வதேச நாடுகள் ஏற்படுத்திவிடக் கூடாது என ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ‘கொரோனாவால் பாதித்த பொருளாதாரத்தை உயிர்ப்பித்து வருகிறோம்’

டெல்லியில் நேற்று ரூ.6.29 லட்சம் கோடி சலுகை தொகுப்புகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது, “எதிர்காலத்தில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பதற்கு மெட்ரோ அல்லாத நகரங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் கிராமப்புறப்பகுதிகளிலும், இரண்டாவது நிலை, மூன்றாவது நிலை நகரங்களிலும் மருத்துவ திறன்களை அதிகரிப்பது மிகமும் முக்கிமானதாக இருக்கிறது. சுகாதார உள் கட்டமைப்பில் ஒட்டுமொத்த முன்னேற்றமும், பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவப்போகிறது. இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக நிதி சேவைகள் துறையின் மூலம் வாரந்தோறும் கண்காணிப்பேன். இதில் தாமதங்களை சமாளிக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை நாங்கள் உயிர்ப்பித்து வருகிறோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

 

உலகிலேயே உயரமான சாலையை லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் திறப்பு

இந்தியாவில் ராணுவத்தின் 58 என்ஜினீயர் பிரிவு அமைத்துள்ள இந்த சாலை, கேலா கணவாய் வழியாக செல்லும் லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும், 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகத்திலேயே உயரமான சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இதற்கு முன், 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலை உலகிலேயே உயரமான வாகன சாலையாக திகழ்ந்த நிலையில் இந்த சாலையை திறந்துவைத்த லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால், இது பொதுமக்கள் பயணிக்கக்கூடிய உலகிலேயே உயரமான சாலையாக இருக்கும் என்ன தெரிவித்தார்.

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நெத்தியடி

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற நிலையில் முதலமைச்சர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ‘தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. சமுதாயத்தை பாதுகாக்கும் விதமாக அரசு போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 10673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 81 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 143.43 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் முன் போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பதில் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் குட்கா பாக்கெட் கொண்டு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அது தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்தித்தார்.

இந்த சூழலில் அதே மு.க.ஸ்டாலின் இன்றைக்கு முதலமைச்சராக உள்ளபோது போதை பொருள் விவகாரத்தை கையில் எடுத்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினை கேள்வியால் மடக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலரையும் ஆச்சரியப்படும் விதத்தில் புள்ளி விபரங்களுடன் அதுதொடர்பான, பதிலை புட்டுபுட்டு வைத்தார். கேள்வி எழுப்பிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த நெத்தியடி பதிலுக்கு எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 8-வது நாளான இன்று காலையிலேயே இந்தியாவுக்கு ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் மனீஷ் நர்வால், சிங்ராஜ் அடானா ஆகியோர் பங்கேற்றனர். சிங்ராஜ் 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

இந்நிலையில் ஆடவர் உயரம் தாண்டுதலின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், வருண் பாட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தொடக்கம் முதலே தொடர்ந்து மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருவரும் 1.73 மீ, 1.77மீ, 1.80 மீ, 1.83 மீட்டர் தூரத்தை தாண்டி முதலிடத்திற்கு போட்டி போட்டு வந்தனர். ஆனால் வருண் பாட்டி 1.80 மீட்டர் உயரத்தை தாண்ட முடியாமல் வெளியேறினார். இறுதியில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் இருவருமே சறுக்கலை சந்தித்தனர். 1.86 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தங்கவேலு தாண்டிவிட்ட நிலையில் ஷரத் குமார் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை.

இதனால் மாரியப்பன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சேம் க்ரேவ் அகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். பரபரப்பு போட்டி இறுதியில் 1.88 மீட்ட உயரத்தை மாரியப்பனால் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் சேம் க்ரேவ் தனக்கு வழங்கப்பட்ட 3வது வாய்ப்பில் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியானது. 3வதாக வந்த ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஜவுளி பூங்கா // அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி செலவில்

கரூர் நகரில் வீட்டு உபயோகத்திற்கான தலையணை உறை, திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், மெத்தை விரிப்பு, கையுறைகள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட கூடிய துண்டுகள், சமையலர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவை கரூரில் இருந்து தமிழகம் முழுவதும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பபட்டு வருகின்றன.

கடந்த 23 -ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இன்றைய தொழில்துறை மானிய கோரிக்கையின் போது, கரூர் மக்களின் நீண்டகால கனவான ஜவுளி பூங்கா அமைய அறிவிப்பு வெளியிட்டது

கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஜவுளி பூங்கா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி செலவில்

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் அதிகப்படுத்த, சிப்காட் மூலம், 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான ஜவுளி பூங்காவை, ஜவுளி பதனம் செய்யும் பிரிவு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பிரிவு, வீட்டு ஜவுளி உற்பத்திப் பிரிவு, உலகத்தரம் வாய்ந்த பரிசோதனை கூடம், கண்காட்சி கூடம், உற்பத்தி மேம்பாட்டு மையம், ஜவுளி வடிவமைப்பு மையம், பிரத்யேகமான திறன் மேம்பாட்டு மையம் போன்ற சிறப்பு அம்சங்களுடன் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.