திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 -ஆம் வகுப்பு மாணவியை 9 பேர் அடங்கிய கும்பல் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் செய்த கொடூர சம்பவம் அரங்கேறி நாட்டையே உலுக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 -ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 9 பேர் அடங்கிய கும்பல் கடத்தி சென்று அருகிலிருந்த வயல்வெளி வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அடுத்த நாள் பெற்றோருக்கு உண்மை தெரியவந்தது. இருப்பினும் மாணவிக்கு வியாழக்கிழமை தேர்வு நடைபெற இருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய மாணவியின் பெற்றோர், அவரை தேர்வெழுத வைத்துள்ளனர்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குற்றவாளிகள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்த நிலையில் காவல்துறை அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திலும், மீதமுள்ள 8 பேரை சிறையில் அடைத்தனர்.