நான் எனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தரம் தாழ்ந்த தகவல்களை சீமான் தரப்பு பரப்பி வருகிறது சீமான் ஒரு மைக் புலிகேசி எனவும் திருச்சி காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் கிண்டல் செய்துள்ளார். திருச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அதாவது வருண்குமாரின் மனைவியுமான ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார்.
ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த 30-ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை காவல்துறைத் துணைத்தலைவராக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வருண்குமார் திருச்சி காவல்துறைத் துணைத்தலைவராகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் காவல்துறைத் துணைத்தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8-ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார். இந்நிலையில், காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.
ஆனால் சீமான் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் வருண்குமார் ஆஜராகி இருந்தார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” சீமான் மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் காரணமாக இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் எனது மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல்லில் காவல்துறைத் துணைத்தலைவராக இருக்கிறார். அவருக்கும் எனக்கும் விவாகரத்து நடந்து விட்டதாக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் தரக்குறைவாக விமர்சித்ததால் தான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன். நிச்சயம் அதனை வாபஸ் பெற போவதில்லை. வாபஸ் பெறுவது போல் இருந்தால் நான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும், நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சீமான் பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. அவர் ஒரு மைக் புலிகேசி. தரம் குறைந்த மனிதர் ” என வருண்குமார் விமர்சித்தார்.