வந்தே பாரத் ரெயில் உணவில் புழுக்கள்..! பயணிகள் வாக்குவாதம்..!

வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஆந்தராவின் தலைநகரான ஐதராபாத்தின் வடக்கே உள்ள செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

குறைந்த நேரத்தில் பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்வதால் இந்த வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வந்தே பாரத் ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன. இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர்.

இதையடுத்து புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.