சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மேலும் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின் , தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2 G-க்காக அப்பா டெல்லி சென்றார். இன்று.. டாஸ்மாக்.. தியாகி..தம்பி.. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா.. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு!” என எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
“பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.