அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , அரசு மருத்துவமனை மற்றும் நியாயவிலை கடை அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் கடைக்கு எதிர்ப்புறம் அரசு மருத்துவமனை, நியாயவிலை கடை, சுமார் 2000 பள்ளி மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் தினந்தோறும் சாலையில் இருந்தபடி மதுபானங்களை குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகையால், பொதுமக்களின் நலன் கருதி இந்த மது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட தவெக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தவெக மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.பழனி தலைமையில் செனாய் நகர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி இன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரை காவல்துறை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக தவெகவினர் சுமார் 300 பேரை காவல்துறை கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் மண்டபத்தில் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.