காரைக்குடி அருகே காவல் நிலையத்துக்குள் காவல் உதவி ஆய்வாளர் பிரணிதா தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பிரணிதா. பிரணிதா நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, புகார் மனு தொடர்பான தகவலுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது, அவர்களுக்கும், பிரணிதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, காவல் நிலையத்தில் சீருடையில் இருந்த தன்னை விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் காயமடைந்ததாக பிரணிதா புகார் தெரிவித்தார். அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவி ஆய்வாளரை தாங்கள் தாக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.