இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க? என்று பொதுவெளிகளில் அதிகம் சித்தாந்தம் பேசுவதை பார்க்கின்றோம். ஆனால், இன்னமும் சாதிய வன்கொடுமைகள் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தென் மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, மதுரை மாவட்டம் மேலூரில் சேக்கிபட்டி- உடப்பம்பட்டியில் பட்டியல் மருத்துவ பணியாளர் மற்றும் அவரின் கணவர் மீது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
“”மதுரை மாவட்டம் மேலூர்- சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிக சுகாதார பெண் தன்னார்வலராக பணியாற்றி வரும் தனலெட்சுமி ( எ) பிரேமா நர்சிங் பட்டயப் படிப்பு முடித்தவர். அவரது கணவர் செந்தில் பெயிண்டர் ஆக தொழில் செய்து வருகிறார். தனலெட்சுமி ஜனவரி 4-ம் தேதியன்று உடப்பம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மக்களுக்கு மாத்திரைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். உடன் அவரது கணவரும் உதவிக்காக வந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நல்லு மகன் அழகன் (எ) குமார் என்பவர் தனலெட்சுமியிடம் தகாத முறையில் தகராறு செய்துள்ளார். சாதியைக் குறிப்பிட்டு இழிவாக பேசியுள்ளார். “நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக உசுரு வாழனுமா? மாத்திர கொடுக்காம நிறுத்துடி” என்று பேசி மாத்திரைகளை சிதறவிட்டு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
என் வேலையை தடுக்காதீர்கள் என்று தனலெட்சுமி சொன்னதற்கு அவரின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து கட்டையை எடுத்து தோள்பட்டை, தலையில் அழகன் அடித்திருக்கிறார். தனலெட்சுமி பலத்த ரத்தகாயம் அடைந்துள்ளார். அவர் தாக்கப்படுவதை தடுக்க வந்த கணவர் செந்திலை தலையில் அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். பலத்த காயத்திற்கு ஆளான இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.